3
"புவனங்கள் உள்ள ஐயர்
பொங்குநஞ் சுண்ண யாம்செய்
தவம்நின்று தடுத்த தென்னத்
தகைந்துதான் தரித்த தென்று
சிவனெந்தை கண்டந் தன்னைத்
திருநீல கண்டம் என்பார்”
என்று நீலகண்டத்தின் பெருமையை உணர்ந்த நாயனார் ஒருவர் எப்போதும், திருநீலகண்டம், திருநீலகண்டம்” என்று சொல்லிச் சொல்லி, திருநீலகண்ட நாயனர் என்ற பெயரையே பெற்று விட்டார்.
சிவபிரான எண்ணாமல் அமுதம் கடையப் புகுந்த தேவர்கள் இப்போது அவனுடைய பெருமையை உணர்ந்தார்கள். தங்கள் பெருமான் என்று இப்போது போற்றுகிறார்கள். நிறந்திகழும் மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமா' னாக இறைவன் விளங்குகின்றான்.
இத்தனை எண்ணங்களும் நீலகண்டத்தைக் கண்டபோது காரைக்கால் அம்மையாருடைய உள்ளத்தே படர்ந்தன.
இப்போது தம்மைப் பற்றியே அவர் எண்ணமிடலானார். அவர் எத்தகையவர்?
முன்பிறப்பிலே தவம் செய்தவர்; ஆதலின் இளம் பருவத்திலேயே அவருக்குக் சிவபெருமானிடம் பக்தி உண்டாகிவிட்டது, பிறந்து தளர் நடையிட்டு மழலைச் சொல் பேசும் போதே சிவனுடைய பெயரையே சொல்லத் தொடங்கினார். வாய் இறைவன் நாமத்தைச் சொல்ல மனம் அவனிடம் பக்தி பூண்டு உரம் பெற்றது. காதல் என்பது தூய அன்பைக் குறிக்கவும் வரும். தாய்க்கும் குழந்தைக்கும் இடையேயுள்ள உறவைக் காதல் என்று சொல்வதும் உண்டு. ஆதலால் பிள்ளைளக்கும் காதலன் என்ற பெயர் வழக்கில் வந்தது. “காதி காதலன்" என்று விசுவாமித்திரரைச் சொல்வார் கம்பர்.