பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



காரைக்கால் அம்மையார் சரிதம்

வணிகர் குலத்தினர் பெருகி வளம் பெறும் கடற்கரைப்பட்டினம் காரைக்கால். அங்கே பெரிய வணிகர் தனதத்தர். அவருக்குப் பெண்ணாகப் பிறந்தவர் புனிதவதியார். இளம்பருவத்திலேயே சிவபெருமானிடம் ஆழ்ந்த அன்புடையவரானார் அப் பெருமாட்டியார். விளையாடும் பொழுதுகூடச் சிவபெருமானப் பற்றிய பாடல்களைப் பாடி விளையாடுவார்.

புனிதவதியார் திருமணப் பருவத்தை அடைந்தார். நாகபட்டினத்தில் இருந்த பரமதத்தன் என்ற வணிககுலக் குமரன் அவரை மணம் செய்துகொண்டான். புனிதவதியார் அந்தக் குடும்பத்திற்கு ஒரே பெண்ணாதலின் அவரைப் பிரிந்திருக்க அவருடைய தாய் தந்தையர் விரும்பவில்லை. அதனால் தம்முடைய மருமகனைக் காரைக்காலிலே இருந்துவிடும்படி வேண்டினர். பரமதத்தன் அவர்கள் விரும்பியபடியே அவ்வூரில் தங்கி அவர்களுடைய சொந்தப் பிள்ளையைப்போல வியாபாரம் முதலியவற்றைக் கவனித்து வரத்தலைப்பட்டான்.

இல்வாழ்வில் புகுந்த புனிதவதியார் சிவபெருமானிடம் ஆராத அன்புடையவராக இருந்ததோடு இல்வாழ்க்கைக்குரிய கடமைகளையும் குறைவற நிறைவேற்றினர். யாரேனும் சிவனடியார் வந்தால் அவருக்கு உணவளித்து ஆடை அணிகளும் பிற பண்டங்களும் அளித்து வழிபடுவார். அவர்களுடைய இல்வாழ்க்கை இனிதே நடந்துகொண்டிருந்தபோது ஒரு நாள் பரமதத்தனிடம் அன்புள்ளவர் ஒருவர் இரண்டு மாங்கனிகளைக் கடையில் இருந்த அவளிடம் கொண்டு வந்து கொடுத்தார். அவற்றை வாங்கித் தன்