பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/587

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

577

அது சினத்துடன் இருந்தால் எப்படி இருக்கிறது? அப்போது அது நடந்தால் இந்தப் பூமியே அதிரும்; பூகம்பம் வந்தது போல நடுங்கும்.

கடக்கின் படிநடுங்கும்.

அது கோபத்தோடு நோக்கினால் அதன் கண்களிலிருந்து அனல் கொப்புளிக்கும். அது கோபத்தோடு எந்தத் திசையில் தன் பார்வையைச் செலுத்துகிறதோ, அந்தத் திசையிலுள்ள பொருள்களெல்லாம், அந்தக் கண்கள் உமிழும் தீயால் வெந்து போய்விடும்.

நோக்கின் திசைவேம்.

அது தன் குரலை எழுப்பி இடி போல முழங்கினால் எல்லா உலகங்களிலும் இருப்பவர்கள் அஞ்சி, “பிரளயகாலந்தான் வந்துவிட்டதோ? இடி விழப்போகிறதோ!” என்று நடுங்குவார்கள்.

இப்படிச் செய்யும் இறைவனுடைய வாகனமாகிய ஏற்றுக்கு எதை உவமை சொல்லலாம்? மலைகளைத் தாக்கி இடிக்கும் சிங்கத்தைச் சொல்லலாமா?

அடுக்கல் பொரும் ஏறோ?

மலைகளை மட்டுமா இந்த இடபம் தாக்குகிறது? அண்டங்களெல்லாம் கிடு கிடுக்கச் செய்கிறதே! இது உண்மையில் காளை மாடுதானோ?

ஆன்ஏறோ?

அல்லது பிரளயகாலத்தில் இடியும் மின்னலுமாகப் பிரசண்ட மழை பொழிகிறதே, அந்தக் காலத்தில் இடிக்கும் இடியோ?

உருமேறோ?

நா—37