விழுந்த குழந்தை வந்து அணுகினால், அவன் அழுக்குடம்புடையவன் என்று கருதாமல் உடனே ஆவலுடன் அணைத்துத் தழுவும் தாயைப் போன்ற அன்புடையவன் அவன். இது மிகவும் உயர்ந்த கருணை அல்லவா? அதை நினைக்கிறார்.
"அதுவே பிரான் ஆமாறு"
அது என்றது முன் ஒரு பாட்டில் சொன்னதைச் சுட்டுவது மாத்திரம் அன்று; தாம்பெற்ற இன்பத்தை உள்ளூற எண்ணி உருகும் மனப்பாங்கையும் அந்தச் சுட்டுச் சொல் குறிப்பிக்கிறது. இதை நெஞ்சறி சுட்டு என்பர்.
அவன் ஆட்கொள்வதும் பெரிய புதுமை, பரந்த உலகத்தில் மனத்தை மயக்கும் பொருள்கள் எவ்வளவோ இருந்தும் அவற்றிலே ஈடுபடாமல் தன்னையே நினைக்கச் செய்யும் கருணையை உடையவன் இறைவன். "ஒன்றே என் உள்ளத்தின் உள்ளடைத்தேன்”என்று சொல்லும் அளவுக்குத் தன் அடியாரைப் பக்குவப்படுத்தி ஆட்கொள்ளும் வித்தகன் அவன்.
'ஆர் ஒருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்’
என்று வியப்பார் மணிவாசகர். அம்மையார் அதையும் நினைக்கிறார்.
"ஆட்கொஅளும் ஆறும் அதுவே"
இறைவன் பிரானாகி நிற்பதும் கருணயினால் ஆட்கொள்வதும் எல்லோருக்கும் தெரிவதில்லை. அவன் தமக்கு வேண்டியவை வழங்காத லோபி என்றே பலர் நினைக்கிறார்கள். “சாமிக்குக் கண் இல்லை” என்று குறை கூறுபவர்களை நாம் அறிந்திருக்கிறோமே! “சாமியா? அப்படி ஒருவர் இருக்கிறாரா?, அப்படியானால் அவர் உறங்கிக் கொண்டிருக்க வேண்டும்” என்று சொன்ன அறிஞர்களும் இருக்கிறார்கள்.
இறைவனுடைய திருவருளைப் பெற்றவர்களுக்கே அவனுடைய பெருமையும் கருணையும் தெரியவரும். "அவன்