15 கால்டுவெல்
என்பதற்கு அறிகுறியாகத் திருநெல்வேலியிலும் மேற்குத் தொடர்ச்சி மலையிலும் உள்ள சில சாதிகளின்பால் சிங்களத் தொடர்பை நினைவுபடுத்தும் மரபுகளும் பெயர்களுங்கூட அமைந்துள்ளன. விஜயனும் அவனுடைய வீரர்களும் பாண்டியர்களுடன் திருமண உறவு ஏற்படுத்திக் கொண்டார்கள் என்பது கூறப்படுகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றின் சங்கமத்துறையிலுள்ள பாண்டியர்களின் பழந்தலைநகராகிய கொற்கையும் அவர்களுக்கு அறிமுகமாயிருக்க வேண்டும். எனவே, சிங்கள அகதிகளாகிய அவர்களாலேயே ‘தாமிரபரணி’ அப்பெயர் பெற்றிருக்க வேண்டும். எப்படியாயினும் சிவப்பு இலைகளையுடைய மரம் அதாவது தாமிரபரணி என்பது முதலில் மரத்திற்காகிப் பின்பு நகரத்திற்காகிப் பின்பு மாவட்டத்திற்காகிப் பின்னர் ஆற்றிற்கு ஆகியிருக்க வேண்டும். (சிறந்த மரங்களினின்றும் கிராமங்கள் பெயர் பெறுவது இந்தியாவிலுள்ள பொது வழக்கமாகும்.) (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய ஐவகை நிலங்கள் பற்றியே இத்தகைய எதிரும் புதிருமான ஆராய்ச்சி உண்டு - ந.ச.). ஆனால், ஆரம்பத்திலேயே அப்பெயர் அவ்வாற்றிற்கு ஆகிவந்திருக்குமென்று கூறுவது அவ்வளவு பொருத்தமன்று. லாஸன் என்பவர் ‘சிவப்புத் தாமரைகளையுடைய நீர்த் தேக்கம்’ என்று தாமிரபரணிக்குப் பொருள் கூறுகிறார். ஆனால், இத்தகைய விளக்கத்திற்கு ஒரு சிறிதும் அடிப்படை இல்லை. தமிழ்ச் செய்யுள் இலக்கியங்களில் அச் சேர்க்கைச் சொல்லின் முதற் பகுதி விடப்பட்டு விட்டது. அந்த ஆறு ‘பொருணை’ அதாவது பரணி என்று மட்டும் வழங்கப்படுகிறது. ஐரோப்பியர்கள் தாமிரபரணி எனத் தவறுதலாக உச்சரித்தும் எழுதியும் வருகிறார்கள். ஆனால், இரண்டாவது பகுதியாகிய பரணி என்பதைப் பூர்ணி என்று எழுதும் பழைய வழக்கத்திலிருந்து இத்தவறுதல் வந்திருக்க வேண்டும்.
தாமிரபரணியின் கிரேக்கப் பெயர்
தாலமியின் (Ptolemy) காலத்தில் கிரேக்கர்கள் இந்த ஆற்றைச் சோலன் (Solen) என்றே வழங்கினார்கள். இது மிக விந்தையானது. ஏனெனில், கிரேக்கர்கள் சிலோனை பல நூற்றாண்டுகள் வரை தப்ராபனி (Taprobane) என்றே வழங்கி வந்தார்கள். சிலோனின் பெயரைப் போலவே ஆற்றின் பெயரும் இருப்பதால், அதையும் தப்ராபனி என்றே வழங்கியிருக்க வேண்டுமென்று யாரும் எண்ணுவர். கிரேக்க வணிகர்கள் தென்னிந்தியாவிற்கு வந்தபொழுது தாமிரபரணி என்ற பெயர் அந்நதிக்குச் சாதாரணமாக வழங்கப்படவில்லை என்றே நாம் எண்ண இடமிருக்கிறது. ஆனால், இது மகாபாரதத்திலுள்ள பெயர்