திருநெல்வேலி சரித்திரம் 44
காலத்தில் வாழ்த்தவரென்பது தோன்றுகிறது. தென் திருவிதாங்கூரில் கோட்டாற்றிலுள்ள சிவன் கோயில் கல்வெட்டில் இராசேந்திர சோழன் பெயர் சிவன் என்ற பெயருடன் ஒன்றியிருக்கிறது. மும்முடி தாங்கிய சோழனுடைய சிறந்த நகராகிய கோட்டாற்றில் தெய்விகத் தன்மை பொருந்திய ‘ராசேந்திர சோழேசுவரனு’க்காக இந்தக் கோவில் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டது. ‘இராசேந்திர சோழேசுவரன்’ என்ற சொற்றொடர் வாயிலாக இராசேந்திர சோழன் பெயர் சிவனுடன் இணைக்கப்பட்டமை தெரிகிறது. அல்லது, இராசேந்திர சோழனால் வணங்கப்பட்ட சிவன் என்றும் பொருள் படலாம் (இராமேசுவரம் என்பது போல - ந.ச.).
இந்தக் கோவிலிலும் தெற்கேயுள்ள மற்றக் கோவில்களிலும் இராசேந்திர சோழனுக்கு உரிமையாக்கப்பட்ட பல இனாம்களின் ஆதாரங்களை நான் பார்வையிட்டேன். அவற்றுள் ஒன்று, சுந்தரபாண்டியனுடையது. அதன் மூலம் சுந்தர பாண்டியன் இராசேந்திரனுக்கு முன் வாழ்ந்தவனல்லன் என்பதும், அவனுக்குப் பின் வாழ்ந்தவன் என்பதும் தெளிவாகின்றன. ஆகவே சுந்தரபாண்டியனது பெயர் மதுரை அரசு வரிசையிலிருப்பதால், இராசேந்திர சோழனது பெயரும் அவனுக்குப் பின்வந்த சோழ அரசர்களுடைய பெயர்களும் அந்த வரிசையில் இருந்திருக்க வேண்டும்.
கம்பன் காலம்
கி.பி.1112 இல் இராசேந்திரனுக்குப்பின் குலோத்துங்க சோழன் பட்டத்திற்கு வந்ததைச் சளுக்கியக் கல்வெட்டுகள் குறிக்கின்றன. டாக்டர் பர்ன்வெல், அவனது ஆட்சிக்காலம் 1128 இல் தொடங்கியது என்று கூறுகிறார். அவனது அரசாட்சியின் நாற்பத்து நான்காம் ஆண்டு தேதியிட்ட கல்வெட்டொன்று என்னிடம் உள்ளது. அதன் மூலம் அவன் நெடுங்காலம் அரசோச்சியிருக்க வேண்டும் என்பது தெரிகிறது. அவனுக்குப் பின் வந்த சோழர் அல்லது சோழ பாண்டிய அரசர்கள், கரிகாற்சோழன், வீரசோழன், விக்கிரம சோழன் என்பது புலனாகிறது. மேற்கண்டவருள் ஒவ்வோர் அரசரும் சில கல்வெட்டுகளில் ‘சோழ பாண்டியர்’ என வழங்கப்படுகின்றனர். அவர் அனைவரும் இராசேந்திர சோழனுக்குப் பின் வந்தவரே; பாண்டிய வமிசத்தின் கடைசி அரசனான சுந்தரபாண்டியனுக்கு முன் வாழ்ந்தவர்கள் என்பதைத் தவிர அவர்கள் காலத்தைப் பற்றி வேறு எவ்வித விவரமும் எனக்குக் கிட்டவில்லை.
சிறந்த விஷ்ணு பக்தராகிய இராமானுசரின் வாழ்க்கையில் சம்பந்தப்பட்டவனென்று சோழர்கள் கதையில் கரிகாற் சோழனது பெயர்