திருநெல்வேலி சரித்திரம் 86
நாகம்ம நாயக்கன் தானே முழு உரிமை அரசனென்று அறிக்கை செய்தான் என்றும், அதனால் அவன் மகனாகிய விசுவநாதநாயக்கன் தன் தகப்பனை அடக்கிவரச் சென்றானென்றும் குறிப்பிடப்படுகிறது. இந்த அரச நன்றிக்கு மெச்சி விசுவநாதனுக்கு விஜயநகர அரசின் பார்வையில் மதுரைக் கவர்னர் அல்லது லெப்டினண்டு பதவி அளிக்கப்பட்டது. ஆனால், அவன் தன் தந்தையைப் போல அரசனை எதிர்த்துத் தன்னைச் சுதந்தர அரசனாக்கிக் கொள்ளவில்லை. ஆனால், அரச சலுகையினால் கொடுக்கப்பட்ட அதிகாரமும் பதவியும் விசுவனாதனை முழு உரிமை அரசனாக்கிவிட்டதுமின்றிப் பதினைந்து தலைமுறைவரை அரசுரிமை அதிகாரமும் கிடைக்கச் செய்தது. விசுவநாத நாயக்கன் வலிமையும் அரசியல் அறிவும் நிரம்பப் பெற்றவன். அவனது ஆற்றலினால் தான் மதுரை முற்றுகையிடப்பட்டதென்று கூறப்படுகிறது. தஞ்சாவூர் அரசனிடமிருந்து திருச்சிராப்பள்ளியும் கைப்பற்றப்பட்டது என்று கூறப்படுகிறது. அவன் திருச்சிராப்பள்ளியை மதுரை நாட்டுடன் இணைத்தான். ஆர்க்காட்டு நவாபவின் உன்னத ஆட்சிக்காலம் வரை இரு நாடுகளும் ஒன்றாகவே இருந்தன. ‘பலம் வாய்ந்த ஐந்து பாண்டவர்கள்’ என்று வழங்கப்பட்ட உடன்பிறந்தார்களால் ஆளப்பட்டுவந்த திருநெல்வேலியைபும் வென்றான் விசுவநாதன்.
மதுரையிலிருக்கும் அளவிற்கு அதிகமாகப் பாளையக்காரர்கள் திருநெல்வேலியில் இல்லையென்றாலும் அங்கிருந்த பாளையக்காரர்கள் போதுமானவர்களாயிருந்தார்கள். திருநெல்வேலியில் இப்பொழுது இருபத்து இரண்டு சமீன்தாரிகள் (குறுநில அரசுகள்) இருக்கின்றன. மதுரையில் மிகப்பெரிய இராமனாதபுரம் சிவகங்கை குறுநில அரசுகளையும் சேர்த்து இருபத்தாறு குறுநில அரசுகள் இருக்கின்றன. நெல்சனுடைய செய்திக் குறிப்புகளிலிருந்து பொதுவாகப் பாண்டி நாட்டில் பாளையக்காரர்களின் ஆட்சியை ஏற்படுத்தியவன் விசுவநாத நாயக்கனே என்றும் நாட்டில் அமைதி நிலவச் செய்ய அவன் புறப்பட்டபொழுது பாளையக்காரர் அல்லது குறுநில அரசர்களை (சமீந்தாரிகளை) நியமித்தான் என்றும் நான் கருதுகிறேன்.
தென்னிந்தியாவில் பாளையக்காரர்களின் தோற்றம்
விசுவநாதன் தென் மாவட்டங்களில் குடியிருப்புகள் அதிகமானவுடன் தன்னால் தோற்றுவிக்கப்பட்ட அரசமரபு நிலைப்பதற்காக நாட்டின் நலனைப் பற்றி அங்குள்ள முக்கியமானவர்களுடன் கலந்து ஆலோசித்து எல்லா மக்கட்