11. தானை காண் படலம் சுக்கிரீவனது எழுபது வெள்ளம் வானரப் படையை இராமனும் இலக்குவனும் காண்பதைப் பற்றியதாதலின் இப்படலத்திற்கு இப்பெயர் தரப்பட்டுள்ளது. வானரத் தானை காண் படலம்’ என்ற பெயர் சில சுவடிகளில் காணப்படுகிறது. படைத் தலைவர்கள் பற்பலர் பல கோடிப் படை மறவர்களுடன் சுக்கிரீவன் இருக்குமிடம் அடைந்தனர். அவன் அவர்களை அணிவகுக்கச் செய்து பார்வையிட்டான். படைகளின் பெருக்கம் இப்படைகள் குளித்தால் ஏழு கடல் நீரும் வற்றி மண் தெரியும்; ஒரு பக்கம் சாய்ந்தால் அண்டங்கள் மேருவுடன் சாயும்; பரவினால் எள் விழ இடம் இல்லாமற் போகும்; வெப்புடன் சினந்தால், தீக்கடவுளுடன் ஞாயிறும் கரிந்து போகும். தோயின் ஆழி ஓர்ஏழும் நீர்சுவறி வெண்துகளாம் சாயின் அண்டமும் மேருவும் ஒருங்குடன் சாயும் ஏயின் மண்டலம் எள்ளிட இடமின்றி இரியும் காயின் வெங்கனல் கடவுளும் இரவியும் கரியும் (22) படைகள் முழுவதையும் பார்த்தறிய வேண்டுமெனில் நெற்றிக் கண் உடைய சிவனாலும் இயலாது. 'கண்ணின் நோக்குறின் கண்ணுத லானுக்கும் கதுவா மண்ணின் மேல்வந்த வானர சேனையின் வரம்பே' (23)
பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/231
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை