கிரிக்கெட் ஆட்டத்தின் கதை
19
துன்பம் தரும் நிலையில் இருப்பதால், உடனே இந்த மைதானத்துக் கதவுகளை மூடிவைத்து விடுமாறு ஆணைபிறப்பித்தும் விட்டார்கள்' என்றால் பாருங்களேன்.
அசிங்கமான இடம், நாற்றம் வீசும் இடம், அதற்குள்ளே யாரையும் உள்ளே அனுமதிக்கலாகாது என்று ஆணை பிறப்பித்து விட்டால், அதற்காக கலங்கியா விடுவார்கள்? அதே இடத்தில் ஆட்டம் நடக்கத்தான் நடந்தது. அதிகாரத்தை மீறி, காவல்காரனையும் மீறி ஆட்டம் தொடர்ந்தது.
ஜார்ஜ் ஸ்மித் என்ற மைதான நிர்வாகியை மடக்கிப் பிடித்துத் தங்கள் வசம் வைத்துக் கொண்டார்கள் விவேகமுள்ள ஆட்டக்காரர்கள். எப்படி? அவன் விரும்பிய வண்ணம், இரண்டு பென்ஸ் நாணயம் முதல் 6 பென்ஸ் நாணயம் வரை (லஞ்சமாக) கொடுத்துவிட்டு, அந்த மைதானத்திற்குள் அவர்கள் ஆட்டத்தைத்தொடங்கினர். தொடர்ந்தனர்.
இந்த ஆடுகள மைதானமே பெரிய பெரிய போட்டிகளின் நிலைக்களமாக, விளைநிலமாக விளங்கியது. அங்கே ஆயிரக்கணக்கான ரூபாய்களை பார்வையாளர்கள், பணக்காரர்கள் பந்தயம் கட்டிக்கொள்ள, அதற்கான போட்டிகள் நடைபெற்றன. பணம் கட்டி சூதாட்டம் போல ஆடும் பொழுது, பிரச்சினைகள் எழாமலா இருக்கும்?
பிரச்சனைகளில் பிறந்த விதிகள்
அவ்வாறு பூதாகரமாக பிரச்சினைகள் தோன்றும் பொழுது அவற்றிற்கு எப்படி பொருத்தமாக முடிவுகள் எடுப்பது என்பதென்று பல சமயங்களில் அவர்களுக்கிடையே தீராத சிக்கல்களாக முளைத்தன. அதனைத் தீர்த்துக்கொள்ளும் பொருட்டு. விளையாடுகின்ற இருகுழுவினரும் தங்களுக்குள்ளே இணங்கிப் போகும் அளவுக்கு இணக்கமான விதிமுறைகளை முதலில் வகுத்துக்கொண்டனர். அதாவது ஒப்பந்தம் செய்து கொண்டனர்.