பக்கம்:கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்.pdf/73

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
8. வேதநாயக சாஸ்திரியார்[1]

தொண்ணூறு ஆண்டு தமிழ் நாட்டில் வாழ்ந்து தொண்டு புரிந்தவர் வேதநாயக சாஸ்திரியார். அவர் திருநெல்வேலி நகரில் தேவசகாயத்தின் மைந்தனாய்த் தோன்றினார்.அவர் பிறந்த வருஷம் 1774 என்பர். இளமையிலே அவர் தாயார் இறந்துவிட்டமையால், பாட்டனார் அவரைத் தம் வீட்டிற் கொண்டுபோய் வளர்த்தார். தாயில்லாப் பிள்ளையென்று அங்கு, யாவரும் அவர்மீது பரிவு காட்டினர். அதனை அறிந்த வேதநாயகம் அவ்வூர்ச் சிறுவரோடு சேர்ந்து ஆடிப் பாடிக் காலம் கழித்தார்.

கல்வி கற்பதற்குரிய இளமைக் காலம் இவ்வாறு விளையாட்டிற் கழியக்கண்ட தேவ சகாயம் வருத்தமுற்றார்; பாட்டனார் வீட்டிலிருந்து தம் மகனை வருவித்துத் திருநெல்வேலித் திண்ணைப் பள்ளியிற் சேர்த்தார். ஆயினும் பள்ளிப் படிப்பில் வேதநாயகத்தின் உள்ளம் பற்றவில்லை. அது கண்ட தந்தையார் கவலைகொண்டார். செய்வதொன்றும் அறியாது கர்த்தரை நாள்தோறும் தொழுது நின்றார் ; மைந்தனது உள்ளத்தைக் கல்வியிலே கவியச் செய்யவேண்டும் என்று கண்ணீர் வடித்து வேண்டினார். இந்த நிலையில் வேதநாயகத்துக்குப் பல ஆண்டுகள் கழிந்தன.


  1. வேதநாயகம் பிள்ளையை வேதநாயகர் என்றும் வேதநாயக சாஸ்திரியாரை வேதநாயகம் என்றும் வழங்கினால் மயக்கம் ஏற்படாது.