பக்கம்:கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்.pdf/104

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


ஒலிம்பிக் பந்தயத்தில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு, புனித ஆலிவ் மலர் வளையம் பரிசு உண்டு. பாராட்டு உண்டு. புகழ் உண்டு என்று முன் கதையில் விவரித்திருந்தோம் அல்லவா! அதையும் விட, இன்னொரு உரிமையை அந்த வெற்றி வீரர்களுக்கு அளித்திருந்தார்கள். அதாவது தங்களைப் போல சிலை ஒன்றைச் செய்து, ஒலிம்பியா மண்டபத்தில் வைத்துக்கொள்ளலாம் என்பதுதான்.

சிலை அமைத்துக் கொள்வது என்பது சாதாரண வசதி படைத்தவர்களால் முடியாத காரியம். ஏராளமான நிதி வசதியுள்ளவர்கள் அல்லது அவ்வீரன் வாழ்கின்ற நகரத்தார் அனைவரும் ஒன்று சேர்ந்து பணம் திரட்டி உதவி செய்தால்தான் உண்டு. வீரன் மிலோ எவ்வாறோ தன்னைப் போல சிலை ஒன்றை செய்து முடித்து, தன் நகரத்திலிருந்து ஒலிம்பியா மைதானம் வரை தானே தூக்கிச் சென்று வைத்து மகிழ்ந்தானாம். அப்படியென்றால் அவனது ஆற்றலும் மனோதிடமும், எத்தகையதாக இருந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள்.

அவன் உடல் வலிமையைப் புகழ்ந்து பேச வேறு பல கதைகளையும் கூறியிருக்கின்றார்கள். அதையும் பார்ப்போம்.

மிலோ தன் உள்ளங்கையில் மாதுளங்கனி (Pomegranate) ஒன்றை வைத்து மூடிக் கொள்வானாம். அதனை எத்தகைய சக்தி வாய்ந்தவன் வந்து அவன் மூடிய கையைத் திறக்க முயற்சித்தாலும், அவனது மூடிய கையை திறக்கவே முடியாதாம். இதில் என்ன விசேஷம் என்றால், இந்தக் கைமூடி திறக்கும் திறமையான போராட்டத்தில், மிலோவின் உள்ளங்கைக்குள் இருக்கும் மாதுளங்கனியை கொஞ்சங் கூட கசங்காமல் காப்பாற்றி வைத்துக் கொள்கின்ற அதிசயமான சக்தியை படைத்தவனாக விளங்கியிருக்கிறான் மிலோ.