கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்
105
மணமகனுக்கு டௌரிபோல வரதட்சணையாகப் பணம் தந்து எல்லா செலவையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
ஆனால், வீரன் மிலோவின் நிலை வேறுவிதமாக அமைந்திருந்தது. மணமகனே மிலோவுக்கு ஏராளமான பணத்தைக் கொடுத்து, அவனது மகளை மணம் புரிந்து கொண்டான். மிலோவின் புகழ், அவனது சமுதாய மரபையே மாற்றி அமைத்திருக்கிறது என்றால் பாருங்களேன்.
இத்தகைய வீரனின் இறப்பை, சாதாரண மரணமாகக் கூறாமல், வீரமரணமாகவே வரலாற்றாசிரியர்கள் கூறியிருக்கின்றார்கள். காட்டில் ஒரு நாள் மிலோ தன்னந்தனியாகப் போய்க் கொண்டிருந்தான். அப்பொழுது வழியிலே வீழ்ந்து கிடந்த ஒரு பெரிய மரத்தின் அடிப்பகுதியில் சிறுபிளவு ஒன்று தெரிந்ததைப் பார்த்துவிட்டு, அதில் கையை விட்டுப் பெரிதாகப் பிளந்திட முயற்சித்தானாம். வலிமை பொருந்திய வீரன், தன் சக்தியை வேண்டாத இடத்திலே சென்று பரிட்சித்துப்பார்க்கப்போய், அடிமரத்தைப் பிளந்து கொண்டே போகும் பொழுது, திடீரென்று பிளவின் சக்தி திரும்பவே, எதிர்பாராத விதமாக பிளவின் இடையிலே மாட்டிக் கொண்டானாம்.
பிரிக்கப்பட்ட அடிமரம் படிரென்றுசேர்ந்து கொள்ளவே, அதன் இடையில் பிடிபட்டுப்போன மிலோவால் வெளிவர முடியாமல் மாட்டிக் கொண்டு விட்டான். காட்டிலே தனியன். கதறினாலும் துணைக்கு யார் வருவார்! அவன் அலறலைக் கேட்டு ஓநாய் கூட்டம் தான் வந்ததுபோலும், ஓநாய் கூட்டத்திற்கு அவன் இரையாகிப்போனான் என்பதாக அவன் முடிவைக் கூறுகின்றார்கள். பலமுள்ளவன், பயனற்ற காரியம் ஒன்றைச் செய்து பலியாகிப் போனான் என்பதற்கு உதாரணமாக, மிலோவின் ஜீவியம் முடிந்திருக்கிறது.