பக்கம்:கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்.pdf/123

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்

121


21. இரண்டு கெட்டான் ஈதிமஸ்

ஒருவன் ஒலிம்பிக் பந்தயத்தில் வெற்றிபெற்று புகழடைந்து விட்டான் என்றால், அவனை இந்திரன் சந்திரன் என்று நம்மவர்கள் போல புகழந்து பேசி, ஓகோ என்று வானளாவ உயர்த்தி, கதை கட்டி விடுகின்ற பழக்கம், கிரேக்கத்தில் நம்மைவிட சற்று அதிகமாகவே இருந்திருக்கிறது.

அந்த வீரன் எப்படிப்பட்டவன் என்பதைக் கூட அவர்கள் எண்ணிப்பார்ப்பதுமில்லை. அந்த இரண்டுங்கெட்டான் நிலைக்கு உள்ளாகியிருந்த ஈதிமசுக்கும் அதே போல புகழும், புராணம் தோற்பதுபோன்ற பின்னணியில் உள்ள கதையும் உருவாயின.

தியாஜனிசிடம் தோற்று ஈதிமஸ், பணத்தைக் காட்டி, அவனைப் பக்குவப்படுத்தி, தான் வெற்றி பெற சமரசம் செய்து கொண்ட சுத்த சுகுணவீரன் என்பது, பின்னர் அடுத்து வந்த ஒலிம்பிக் பந்தயத்தில் குத்துச்சண்டைப் போட்டியில் வெற்றி பெற்ற மகாவீரன் என்பதையும் நீங்கள் தியாஜனிஸ் கதையில் படித்தீர்கள்.

இத்தாலியின் மேற்குக் கரையோரப் பகுதியில் தெமிசா என்றொரு நகரம் இருந்தது. அந்த நகரில் பொலைட்ஸ் என்றொரு வீரன் இருந்தான். அவன் ஒரு சமயம் போர் செய்து கொண்டிருக்கும் பொழுது அகால மரணமடைந்து விட்டான். அதன்பின் அந்த வட்டாரத்தில் அவன் பேயாகத் திரிந்து கொண்டிருந்தானாம்.

பேயாகத் திரிந்த பொலைட்ஸ், தெமிசா நகரத்து மக்களை ஒரு பயங்கர நிலைக்கு ஆளாக்கியிருந்தான்.

அதாவது, வருடத்திற்கு ஒருமுறை தனக்கொரு கன்னிப்பெண்ணைக் கொண்டு வந்து காணிக்கையாகத் தரவேண்டும் என்று தெமிசா நகரத்து மக்களைத் தொந்தரவு செய்து பயமுறுத்தி வந்தான். பெண்ணாசை பேயையும் விடவில்லை பார்த்தீர்களா?