கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்
133
ஒருவர் ஒலிம்பிக் பந்தயத்தில் வெற்றி பெறுவது என்பதுவே மிகவும் ஆச்சரியமான அதிசயமான செய்தி. அதிலும் ஒரு பரம்பரையே ஒலிம்பிக் பந்தயத்தில் வெற்றி பெறுகின்றது என்றால், அது வீரப் பரம்பரையாகத்தானே இருக்கமுடியும்!
அத்தகைய திறமை மிக்கப் பரம்பரையை தொடங்கி வைத்துச் சிறப்படைந்தவன் தயாகரஸ் என்ற வீரன். இவன் குத்துச் சண்டையில் கி.மு. 464ஆம் ஆண்டு ஒலிம்பிக் பந்தயத்தில் வெற்றி பெற்றிருந்தான். இவன் செய்த சண்டையின் சிறப்பினையும் நுண் திறனையும் அறிந்த பிண்டார் எனும் பெரும் கவிஞர், எழுச்சி மிக்கப் பாடலால் இவனது வீரத்தைப் புகழ்ந்து பாடினார். அந்தப் புகழ்ச்சி வரிகள், அன் எனும் கோயில் சுவர்களில் தங்க எழுத்துக்களால் பொறிக்கப்பட்டு இருந்தன என்று ஒரு வரலாற்றுக் குறிப்புக் கூறுகிறது.
இத்தகைய இணையிலா வீரனின் பரம்பரையும் இவனைப் போலவே, வீரமிக்கவர்களாக, வெற்றியாளர்களாகவே விளங்கியிருக்கிறார்கள்.
தயாகரசின் மூத்த மகன் டமாகெடஸ் (Damagetus) என்பவன். பங்கராசியம் எனும் போட்டியில், 452ம் ஆண்டில் வென்றான், அதனைத் தொடர்ந்து கி.மு. 448ம் ஆண்டிலும் வென்று தன் வெற்றியின் மேன்மையை நிலைநாட்டினான்.
மூத்தவனுக்கு இளையவன் சளைத்தவன் அல்லன் என்று நிரூபிப்பது போல், தயாகரசின் இரண்டாவது மகன் அகுசிலாஸ் (Acusilaus) என்பவனும் ஒலிம்பிக் பந்தயத்தில் குத்துச் சண்டைப் போட்டியில் வெற்றி பெற்றான்.