பக்கம்:கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்.pdf/139

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்

137




26. விதியால் வீழ்ந்த டோரியஸ்


டோரியஸ் எனும் வீரனின் கதை வீரக்கதையா சோகக் கதையா என்பது புரியாத புதிராகவே இருக்கிறது. இவன் ஒலிம்பிக் பந்தயத்தில் குத்துச் சண்டைப் போட்டியில் வெற்றி பெற்ற வீரனே வீரன் என்பதால், இவனுக்குத் தனி மரியாதையும் இனிய புகழும் இருக்கத்தான் இருந்தது.

கிரேக்கத்தின் முக்கிய இரு நாடுகள் ஏதென்சும் ஸ்பார்ட்டாவும் ஆகும். இவ்விரு நாடுகளுக்கிடையே அடிக்கடி சண்டை நடப்பது சகஜமாக நடக்கக் கூடியதுதான். அந்தச் சண்டை டோரியஸ்ஸின் தலைவிதியையே மாற்றக்கூடியதாக இருந்தது.

டோரியஸ் ஏதென்ஸ் நாட்டில் வசிப்பவன். ஏதென்ஸ் ஸ்பார்ட்டாவுடன் சண்டையிடும் போது, ஏதென்ஸ் நாட்டுக்காகப் பணியாற்றாமல் எதிர்ப்புப் பணியில் இறங்கி வேலை செய்தான். அவனை எதிரி என்று தீர்மானித்து, கைது செய்தனர். விசாரணைக்குப் பிறகு நாடு கடத்தி விடலாம் என்று தீர்மானித்து, இத்தாலியில் உள்ள தூரி என்னும் இடத்திற்கு அனுப்பிவிட்டனர்.

வேறு இடம் போனதும்தான் டோரியஸுக்கு வீரம் வந்தது போலும், அங்கிருந்து படையைத் திரட்டிக் கொண்டு வந்து கி.மு. 410ம் ஆண்டு ஏதென்ஸ் மீது படையெடுத்தான். அந்தப் போரில் டோரியஸ் தோற்றான். கைதியானான். மீண்டும் நீதி மன்றம் அவனை விசாரித்தது. இப்பொழுது மரண தண்டனை விதித்தது.