34
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
கதையில் கேட்ட இடத்தை, நேரில் கண்டு ஈடுபாட்டுடன் வணங்கினர். காணிக்கை செலுத்தினர்.
திருத்தலங்களில் அமைந்துள்ள கோயில்களில் பணி செய்திடும் குருமார்களும், மக்களுக்கு பிரசங்கம் செய்து கடவுள் பக்தியை மேலும் வளர்த்தார்கள். அதற்காகவே, கோயில்களில் பிரார்த்தனை மண்டபங்கள் அமைக்கப்பட்டன. மக்கள் பயபக்தியுடன், பிரசங்கங்களைக் கேட்டு பக்தி ரசனையில் திளைத்தார்கள்.
கடவுள் மக்களுக்கு அருள் பாலித்து நன்மை செய்த இடம், அற்புதம் நிகழ்த்திய திருத்தலம் என்பதை எடுத்துக்காட்ட கற்களைப் பதித்த (Stones) இடம், புனிதத்தனம் என்று மக்களால் போற்றி ஏற்றுக் கொள்ளப்பட்டது.
குழந்தைகள் மனதிலே மத உணர்வு வேரூன்ற இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள், பிரசங்கங்கள், பிரார்த்தனைகள், விழாக்கோலங்கள், விருந்து வைபவங்கள் எல்லாமே உதவி வந்தன. உத்வேகம் ஊட்டின.
இப்படியாக மத விஷயங்கள், கோயில்களிலிருந்து வெட்ட வெளியான பிரதேசத்திற்கு வந்தன. மதமே வாழ்க்கை, வாழ்க்கையே மதம் என்ற பற்று, பாசமுடன் பிறந்து வளர்ந்து வேரூன்றி, விலக்க முடியாத வெறியாகிப் போனது தான், விந்தைமிகு செயலாகும்.
இஸ்ரேலிய மக்களின் விழாக்கள், இறைவனுக்குத் துதிபாடவும், நன்றி கூறவும் பயன்பட்டன என்றால், கிரேக்க நாட்டு மக்கள் நடத்திய விழாக்கள் கொஞ்சம் மாறுபட்ட கூர்மையான மதிநுட்பத்துடன் திகழ்ந்தன. அந்த மாறுபட்ட அணுகுமுறையே, விளையாட்டுக்கள் வளர்ச்சிபெற உதவின.