பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/266

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

262 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


படாதிருத்தல் ஒரு முதனிலைத் தாய்மை நற்குணம். அழுக்காறாமையை மேற்கொண்டொழுகுவதன் மூலம் அவாவை அறுக்கலாம். ஆசைகளினின்று விடுதலை பெறலாம். ஏனெனில், ஆசையின் தாயே - அழுக்காறு. ஆசையிலிருந்து விடுதலை பெறுவதால், வெகுளியினின்றும் விடுதலை பெறலாம், வெகுளியினின்று விலகினால் இன்னாச் சொற்களைப் பேசல், ஒறுத்தல் முதலிய பல்வேறு தீச் செயல்களினின்றும் விடுதலை பெறலாம். அழுக்காறு கொள்ளுதல் நரகத்தை இந்த நிலவுலகத்தில் உருவாக்குவதையே ஒக்கும்.

அழுக்காறு, கொண்டவரை மட்டும் அழிப்பதில்லை. யாரை நோக்கிக் கொள்ளப் படுகிறதோ அவர்களுக்கும் தீங்கு விளைவிக்கிறது. முடிவில் சமுதாயம் முழுவதுமே பற்றி எரிந்து விடும். தன்னைக் கொண்டவரையும் அழித்து, சமுதாயத்தையும் அழிக்கின்ற பேராற்றல் அழுக்காற்றிற் குண்டு. அதனால், பெறுதற்கரிய உயர்ந்த மாமேதைகளுக்கும் மகாத்மாக்களுக்கும் கூட துன்பம் விளைவிக்கப்படுகின்றது. ஏன்? கடைசியில் அவர்களை இழந்தே விடுகிறோம். உலக வரலாற்றில் நிகழ்ந்துள்ள போர்கள் யாவற்றுக்கும் அடிப்படை அழுக்காறேயாகும். இயேசு, நபிகள், சாக்ரடீஸ், அண்ணல் காந்தி அடிகள் ஆகியோரை எல்லாம் காலத்திற்கு முந்தியே நாம் இழந்ததற்குக் காரணம் அழுக்காறேயாகும். அதனாலன்றோ , எந்த நற்குணம் இருந்தாலும், இல்லை யாயினும் அழுக்காறாமை ஒன்றைப் பெற்றிருப்பது பெரும்பேறு என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

திருவள்ளுவர் அழுக்காறாமை என ஓர் அதிகாரமே வகுத்து, பத்துக் குறட்பாக்களில் அழுக்காற்றின் தீமையை விளக்குகின்றார். உலகியல் வழக்காற்றுச் சொல்லால் அழுக்காற்றைப் "பாவி” என்று ஆத்திரத்தோடு குறிப்பிடு கின்றார் திருவள்ளுவர்.