பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/313

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 309


தொலைக்கவேண்டும் என்பதேயாகும் என்றும் அவள் கூறுகின்றாள்.

இரப்போர்க்கு இல்லென்று இயைவது கரத்தல்
வல்லர நெஞ்சம் வலிப்ப.

"நம்மினும் பொருளே காதலர் காதல்" என்பது அகநானூறு. இங்கு, இயைவது என்று குறிப்பிட்டது பொருளுடைமையின் தகுதி மட்டுமன்று. அப்பொருளை ஈட்டக்கூடிய ஆற்றலையும் உட்படுத்தி நிற்கிறது. புறநானூறு தெளிவாகக் கூறுகிறது. "செல்வத்துப் பயனே ஈதல்” என்று. ஆதலால், செல்வத்தை ஈட்டுதலும், அச் செல்வத்தைப் பிறர்க்கு வழங்குதலும் ஒரு நோன்பாகும். இந்த நோன்பைச் செய்கின்றவர்கள் - நோற்பவர்கள் சிலரேயாக இருக்கிறார்கள். எனவே இலர் பலராக இருக்கிறார்கள். இந்த நோன்பை நோற்பார் பலரானால், செல்வம் உடையரும் பலராவார்கள். இதுதான் நியாயமான உரை. இன்றையப் பொருளியல் சிந்தனையுலகும், புதுமை உலகும் தெளிவாகப் பேசுகின்றன. "மனிதன் ஒரு சமுதாய உறுப்பினன்; அவனுடைய ஆற்றல் சமுதாயத்தின் பொதுவுடைமை. அவனுடைய ஆற்றலால் விளைகின்றவை அனைத்தையும் அனுபவிக்கச் சமுதாயத்திற்கு உரிமையுண்டு” என்பது. ஒருவர் தனது ஆற்றலால் செல்வம் ஈட்டினாலும் அவர் ஓரளவே அனுபவிக்கலாம். எஞ்சியதைச் சமுதாயத்திற்குத் தருதல் வேண்டும் என்று இன்றைய நியாயம் கூறுகிறது - நீதி பேசுகிறது - சட்டம் வழி வகுக்கின்றது. இக் கருத்தினையேதான் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே திருவள்ளுவர் செல்வத்தை முயன்று ஈட்டிப் பலருக்கும் வழங்கும் நோன்பை நோற்பார் பலரானால் செல்வம் உடையாரும் பலராக இருப்பார்கள் அங்ங்ணம் நோற்பார் சிலராயின் வறியவர் பலராவர் என்று தெளிவாகக் கூறினார்.