பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/327

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 323


அதிகாரத்தில் முதற் குறளாகக் கொல்லாமையை அறம் என்று பொதுவாக உணர்த்தி அடுத்த குறளில்,

"பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்று ளெல்லாம் தலை”

(322)

என்று கொல்லாமை நெறியை வற்புறுத்துகின்றார். இந்தக் குறளில் பலரோடு பங்கிட்டு உண்பதும், பல உயிர்களைப் பேணிக் காப்பதும் பேரறம் என்று குறிப்பிடுகிறார். இந்தக் குறளுக்கும் கொல்லாமைக்கும் என்ன தொடர்பு? இதனை விருந்தோம்பலில் கூறக் கூடாதா? அல்லது ஈதலில்தான் கூறக் கூடாதா? இங்ங்ணம் அங்கெல்ல்ாம் கூறாமல் கொல்லாமை அதிகாரத்தில் பகுத்துண்டு பல்லுயிரோம்பும் பாங்கான நெறியைக் கூறியது ஏன்? கொல்லுதலும் குற்றமே. அதைவிடப் பெரிய கொலைக் குற்றம் உண்டி முதலியன வழங்கிக் காப்பாற்றாமல் சாகவிடுவதும் ஆகும் என்பதை உணர்த்த இங்கு கூறினார்.

கூடி வாழும் மனித சமுதாயத்தில் சமுதாயத்தின் ஒரு உறுப்பினராக விளங்கும் மனிதனுக்கு சமுதாய ரீதியாகக் கடமைகளும் உண்டு; உரிமைகளும் உண்டு. சமுதாயத்தில் ஒரு உறுப்பினனாகப் பிறந்த மனிதனைச் சோறு இன்றி சாகவிடும் சமுதாயம் கடமையுணர்வு இல்லாத சமுதாயமாகும். அதையே ஒரு கொலைகாரச் சமுதாயம் என்று கூறினாலும் பொருந்தும். கத்தியெடுத்துக் கொன்றால் மட்டுமே கொலையென்பதன்று, பெற்ற செல்வத்தைப் பலருக்கும் பங்கிட்டுக் கொடுத்து பலரையும் பேணி வளர்க்காமல், சோறிட்டு மருந்து முதலியன வழங்கி பலரையும் பேணி வளர்த்துப் பாதுகாக்காமல் சாகடித்தலும் கொலைக் குற்றமே என்பதனை உணர்த்தவே, இந்தக் குறள் கொல்லாமை அதிகாரத்தில் அமைந்திருக்கிறது. இந்த அடிப்படையில் இன்று நம்முடைய நாட்டினை நோக்கிக்