பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/356

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

352 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்



துலாக் கோலின் தட்டுக்கள் சமமாக இல்லாமல் ஒன்று கீழிறங்குவதைத் 'தட்டு தாழ்கிறது' என்று சொல்லுதல் நாடறிந்த வழக்கு. ஒருவனுடைய உரிமையின் பாற்பட்ட செல்வமுடைமையை ஒரு தட்டிலும், பிறிதொரு தட்டில் அவனது தனித் திறன்களையும் இட்டுச் சீர்தூக்கும் பொழுதும் செல்வமுடைமைத் தட்டுக்கு அவனுடைய திறன்களின் தட்டு தாழாமல் இருக்க வேண்டும். உழைக்கும் திறன், அறிவாற்றல் ஆகியவற்றினுடைய தகுதிக்கேற்பவே செல்வமுடைமை இருக்க வேண்டும். அப்படியாயின் திருவள்ளுவர் உழைப்பின் வழிவரும் செல்வமுடைமையைத் தான் செல்வமெனக் கருதுகிறார். வழி வழிச் செல்வமுடைமை வள்ளுவரால் மறுக்கப்படுகிறது. வள்ளுவர் காலத்தும் பொருட் செல்வம் யாதொரு திறனுமற்ற பூரியர் கண்ணும் இடம் பெற்றிருந்தமையை அவரே "பொருட் செல்வம் பூரியர் கண்ணும் உள” என்று கூறுகிறார். ஆதலால் "தாழ்விலாச் செல்வர்” என்பதற்குத் தன்னுடைய உடைமையின் மதிப்புக்களை நோக்கத் தனித் திறன்களில் தாழாதவர்கள் - அதாவது செல்வமுடைமைக்குத் தகுதியானவர்கள் நாட்டுக்குத் தேவை என்பதாகும்.

செல்வத்தின் ஊற்று உழைப்புத் திறனேயாகும். இவ்வூற்றுடையோர் மேலும், மேலும் செல்வம் பெருக்குவர் என்பதனால், தேக்கமடையாத - தேக்கமடைய முடியாத மனிதனின் திறன்களை முதன்மைப்படுத்தியே "தாழ்விலாச் செல்வர்" என்று அருளினார்.

"தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு” (731

என்பது குறள்.