திருக்குறள் ☆ 381
பாதுகாப்புச் செய்யும் தகுதியுடையவர்களே உண்மையான இனம்.
காதலிக்குக் காதலனைப் பிரிந்து வாழ்தல் துன்பம் தருவது. அதற்கிணையான துன்பம் உலகத்தில் வேறு இல்லையென்பது தமிழிலக்கிய முடிவு. காதலி, காதலன் பிரிந்து வருந்தும் துன்பியல்பை வடித்துக் காட்டும் அகத்துறை இலக்கியங்கள் தமிழில் ஏராளம் உண்டு. "நிற்பிரியேன், பிரியின் தரியேன்” என்பதே காதலியின் சூளுரை. பிரிவுத் துன்புத்தைப் பிறிதோரிடத்தும் திருக்குறள் - தலைவி வாயிலாக,
"செல்லாமை உண்டேல் எமக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை"
(1151)
என்று பேசுகிறது.
காதலி, காதலனைப் பிரிந்து வாழும் துன்பத்திற்கு இணையான துன்பமாக வேறொன்றையும் சொல்ல முடியாது. வேறு எதை இழந்தாலும் அல்லது பிரிந்தாலும் வேறொன்றின் மூலம் ஈடுசெய்து துன்பத்தை மாற்றிக் கொள்ளலாம். காதலர்ப் பிரிவில் அஃதிலாது. இயன்றால், அது காதலுமில்லை. ஆனால், காதல் பிரிவுத் துன்பத்திற்கு நிகராக இனமல்லாதவர் வாழும் ஊரில் வாழும் துன்பத்தைத் திருவள்ளுவர் இணைக்கின்றார். ஆம்! காதலின்பம் ஒரு வகையான உயிரின்பம். அந்த இன்பத்திற்குக்கூட இடையூறு செய்யாமல், துணை நிற்பதோடன்றி வேறு பிற துறைகளிலும் துணை நிற்கக்கூடிய இன்றியமையாத ஒன்று இனமேயாகும். ஆதலால், நமது வாழ்க்கைக்கு ஒத்த இனத்தை ஊரில் உருவாக்கி ஒத்ததறிந்து வாழ்வோமாக,
தமக்கு இனமல்லாதவர்கள் வாழும் ஊரில் வாழ்தல் துன்பம். அதனினும் துன்பம், இன்பத்திற்குரிய காதலனைப்
பிரிந்து வாழ்தல்.