பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/135

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

123





ஏப்ரல் 16


என் கருத்தை மற்றவர் கருத்தாகப் பதியம் போட்டுக் காட்டும் போக்கு மாறிட அருள்க!


இறைவா, உய்யும் நெறியில் உய்த்துச் செலுத்திடும் தலைவா! உய்த்துணரும் திறன் எனக்கு வேண்டும். உய்த்துணரும் திறன்-ஊகித்தல்-மற்றவர் மனம் பற்றிய கற்பனை இவை தம்முள் மாறுபட்டன. மற்றவர் மனக்கருத்து பற்றிக் கற்பனை செய்வது தவறு. இது உறவைக் கெடுக்கும். இறைவா, இந்தக் கற்பனை எனக்கு வேண்டாம். அதுபோலவே மற்றவர்களைப் பற்றி மற்றவர்களின் கருத்தினைப் பற்றி ஊகித்தலும் குற்றமே. இந்த ஊகம் மற்றவர்களைப் பற்றிய உண்மையான மதிப்பீடாக இருக்காது. என் கருத்தையே மற்றவர் கருத்தாகப் பதியம் போட்டுக் காட்டும் முயற்சியே இது. இந்த மாபெரும் தவறை நான் செய்யாமல் என்னைக் காப்பாற்று.

இறைவா, எப்படியும் உறவே முக்கியம். அப்புறம்தான் கொள்கை கோட்பாடுகளெல்லாம். இத்தகைய சால்பு நிறைந்த உறவினை நான் எல்லாரிடத்திலும் பாதுகாத்துப் பராமரிக்க வேண்டும் என்ற உணர்வினைத் தந்தருள் செய்க!

மற்றவர்களுடைய விருப்பார்வங்களை உய்த்தறிந்து நிறைவேற்றும் கடமைப் பாங்கு நிறைந்த வாழ்வை அருள் செய்க! எனக்கு எண்ணற்ற ஆர்வங்கள், ஆசைகள். இவ்வளவும் மற்றவர்களுக்கும் இருக்கும் என்ற சராசரி மனிதனுக்குரிய நம்பிக்கையை அருள் செய்க!

மற்றவர் நலனுக்குரியவற்றை நான் உய்த்தறிந்து செய்யும் கடப்பாட்டில் நிற்க அருள் செய்க! மற்றவர் மகிழ்வை, என் மகிழ்வெனக் கொள்ளும் பெருவாழ்வினை அருள் செய்க!