பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/172

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

160

தவத்திரு குன்றக்குடி அடிகளார்






மே 23


வருங்காலம் கருதித் திட்டமிட்டு வாழ அருள் செய்க!

இறைவா, என் உயிர் வாழ்க்கைக்கு என்னென்ன தேவையென்று முன்னமேயே அறிந்து திட்டமிட்டு வழங்கியருளிய வள்ளலே! நான் இதற்கு என்ன கைம்மாறு செய்ய இயலும்? நின் கருணையைப் போற்றி வாழ்ந்தாலே போதும்.

நின் கருணை பிழைபடாது என்று உணர்த்தும் நிலையில் நான் வாழ்தலே கடமை! இறைவா, நான் ஒர் இயந்திரம்போல் ஓடிக்கொண்டே இருக்கிறேன். எங்கு? மருத்துவமனைக்கு ஓடுகிறேன். அதிர்ஷ்டச்சீட்டு வாங்க ஓடுகிறேன்!

ஆனால், இறைவா, நேற்று ஒரு வார்த்தையில் புத்தி உரைத்தாயே. இறைவா, அந்த அறிவுரை எனக்கு உறைத்தால் போதும். வாழ்க்கையில் அந்தப்புத்தி அமைந்தால் போதும். அது என்ன புத்தி? ஆம் இறைவா, ஒன்று நிகழ்ந்த பிறகு திருந்துவதைவிட, திருத்தமுறச் செய்வதே நல்லது.

நோய்க்கு மருந்து தேடி அலைவதைவிட, நோயே வராமல் வாழத் திட்டமிடுதலே சிறப்பு. வறுமைக்கு ஆளாகி, சிறுமைப் பட்டழிந்து, இரந்து வாழ்வதிலும் உழைத்துப் பொருளீட்டி வாழ்தலே முறை. வம்பை வளர்த்துக்கொண்டு வழக்கறிஞரிடம் செல்வதை விட, வம்பே வராத நல்வாழ்க்கை நூறுமடங்கு நல்லது.

இறைவா, முன்நோக்கியே முகம் அமைந்துள்ளது. எதிர்த்திசை நோக்கியே அனைத்து அறிவுப்புலன்களும் அமைந்துள்ளன. நான், வருங்காலம் கருதித் திட்டமிட அருள் செய்க! வரும் முன் நோக்கும் நுண்ணறிவைத் தந்தருள் செய்க!