பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/180

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

168

தவத்திரு குன்றக்குடி அடிகளார்






மே 31


என் உழைப்பே எனக்கு உத்தரவாதம் என்றருளிய உத்தமனே! போற்றி!

இறைவா, படைத்தளித்திடும் பரம்பொருளே! உன் நிகழ்வுகள், ஒழுங்கமைவுகளுடன் நிகழ்கின்றன. முன் கூட்டியே சீராகத் திட்டமிட்ட செயற்பாடு. ஆதலால், மாறுபாடுகள் இல்லை. எதிர் விளைவுகள் இல்லை.

இறைவா, நின் தொழிலின் மாட்சிமை என்னே! நானும்தான் வேலை செய்கிறேன். நான் வேலை செய்கிறேனா? வேலை என்னை வேலை வாங்குகிறதா? இறைவா, என் நிலை இரங்கத்தக்கது!

இறைவா, நீயும் கருணை இல்லாமல் கைகளை மட்டுமே கொடுத்தாய். உணவைக் கொடுத்தாய் இல்லை. இறைவா, நான் வேலையைத் தேடிச் செய்வதில்லை. ஒரோ வழி செய்தாலும் நெருக்கடிகளுக்கு ஆற்றமாட்டாது செய்கிறேனே. தவிர, வேறு இல்லை!

இறைவா! என்னை வறுமை விரட்டுகிறது! என்னைக் கருணையுடன் காப்பாற்று! நான் என் வேலையைத் திட்டமிட்டுச் செய்ய அருள் பாலித்திடுக!

நான் வேலையைத் தேடிச் செல்லும்படி செய். நான் வேலையைத் துரத்திப் பிடித்துச் செய்து, பயன் கொண்டு பெருமையுடன், வளமுடன், வகையுடன் வாழ அருள் செய்க!

இறைவா, என் உழைப்பே எனக்கு உத்தரவாதம் என்றருளிய உத்தமனே ! உனக்கு நூறாயிரம் போற்றி! நான் வேலையைத் திட்டமிடுகிறேன். பயன் தரத்தக்க முறையில் செய்கிறேன். இறைவா, வழி காட்டுக! வழி நடத்தி அருள் செய்க!