பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/201

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

189






ஜூன் 21


நம்பிக்கையே நல்வாழ்க்கை: இறைவா அருள்க!


இறைவா, நம்பியே கைதொழும் எளியேனை ஏற்றருளும் எந்தையே! "நம்பிக்கை" - சொல் எளிதாக இருக்கிறது. ஆனால், வாழ்க்கையில் கடுமையாக இருக்கிறது.

நம்பிக்கை என்பது எளிதில் தோன்றுவது இல்லை. அப்படியே ஒரோவழி தோன்றினாலும் நிலைத்து நிற்பதில்லை. சிலபொழுது நம்பிக்கையைவிட ஐயப்பட்டு உணர்தலே வாழ்க்கைக்குச் சிறந்த வழி என்றெல்லாம் கருதக் கூடிய சூழ்நிலை தோன்றுகிறது.

நம்பிக்கை கொள்வது என்பது எளிதான காரியம் அல்ல. மிகவும் கடுமையானதாக இருக்கிறது. இங்கும் அங்குமாக நடைபெறும் நம்பிக்கைகள் ஏமாற்றங்களைத் தந்ததன் விளைவாக நம்பிக்கை தோன்றவே மறுக்கிறது.

இறைவா, நம்பிக்கையின்மையினால் வரும் இழப்புகள், துன்பங்களைவிட நம்பிக்கையினால் வரும் இழப்புகள் துன்பங்கள் குறைவு என்றருளிச் செய்கின்றனை, நன்றருளிச் செய்தனை.

இறைவா, நான் நம்பிக்கையை என் வாழ்க்கையின் மையமாகக் கொள்கிறேன். என்னுடைய வாழ்க்கையில் நம்பி நடத்தல்-வாழ்தல் என்ற கொள்கை பொருந்தி அமைய அருள் செய்க. என் நம்பிக்கை உள்ளத்தை வலிமைப்படுத்தித் துரோகங்களை எதிர்த்துப் போராடும் உணர்வைக் கொடு.

என் நம்பிக்கை, அறிவறிந்த ஆள்வினை, திறம்பட இயங்கினாலே, என் வாழ்க்கை எளிதாகிவிடும். நான் நம்பிக்கையோடு வாழ்வேன். பிறரும் என்னை நம்பத் தக்க வண்ணம் நடந்து கொள்வேன். நம்பிக்கையே நல் வாழ்க்கை இறைவா, அருள் செய்க!