202
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
ஜூலை 4
|
இறைவா, நினைப்பு மாத்திரையில் உலகத்தை இயக்கும் தலைவனே. நின் ஆற்றலுக்கு ஆயிரம் ஆயிரம் போற்றிகள். இறைவா, செய்யும் பணியில் வெற்றி பெற வேண்டும். அடுத்து நின்னருள் பெற்றுய்யும் இன்ப அன்பு வேண்டும்.
அன்பும், வெற்றியும் பெறுவதே வாழ்க்கையின் குறிக்கோள். இவற்றை அடைய எனக்குப் பணம் தேவை, அள்ளித்தருக. இறைவா, என்ன சிரிக்கிறாய்? சதுப்பு நிலத்தில் மாளிகை கட்ட இயலுமா? நிற்குமா? களர் நிலத்தில் பயிர் வளருமா? இறைவா, இது என்ன கேள்வி கேட்கிறாய்?
சதுப்பு நிலத்தில் மாளிகை நில்லாது; களர் நிலத்தில் பயிர் வளராது. இறைவா, அதுபோலச் சலுகைகளால், உறுதியும் திண்மையும் இழந்துள்ள மனத்தை உடையார் எந்தக் குறிக்கோளையும் அடைய இயலாது.
என்னுடைய குறிக்கோள் நிறைவேற, பணம் முதல் தேவையில்லை. இரண்டாவது தேவைதான். முதல் தேவை உறுதியான - தீர்மானமுடைய மனம் வேண்டும். தீர்மானத்தை நிறைவேற்ற சரியான விதிமுறைகள் வகுக்கப் பெறுதல் வேண்டும்.
குறிக்கோளுடைய வாழ்க்கைக்குத் தீர்மானமும் விதி முறைகளும் எல்லாவற்றையும் விட முக்கியமானவை. இறைவா, வலிமையான மனம், தெளிவும் உறுதியும் மிக்க புத்தி, ஊசலாடாத சிந்தனை-இவற்றை அருள் செய்க! என்னிடம் தெளிவான தீர்மானங்கள் உண்டு. ஆயினும் உறுதியான கடைப்பிடி இல்லை.
இறைவா, உறுதியான கடைப்பிடியில் நிற்கும் இயல்பினை அருள் செய்க! எனக்குச் சலுகை வேண்டாம். வாழும் நெறி அருள் செய்க!