பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/238

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

226

தவத்திரு குன்றக்குடி அடிகளார்





ஜூலை 28




இறைவா, எய்ப்பினில் வைப்பாக இருந்து வாழ்வித்து அருள் செய்க!

இறைவா, நரகொடு சுவர்க்கம் நானிலம் புகினும் புக்குநின்றருளும் என் தலைவா! நின் திருவடிகள் போற்றி! போற்றி!! இறைவா, நீ என் வாழ்க்கைக்குத் துணை! என் மனத்துள் கருத்துருக் கொண்டருள்வாய்! இது உண்மை இறைவா. ஆனால், எனக்கு நாணம் மேலிடுகிறது.

என் தலைவனே! நான் ஒரு அறிவு ஜீவி. நானும் செயல்கள் செய்வேன். எனக்கும் பொறி புலன்கள், அறிவுக் கருவிகள், செயற்பாட்டுக்குரிய கருவிகள் உள்ளன. நான் என்ன சோற்றுப் பாவையா? நான் உண்டு உடுத்து மாள்வதா? பலநூறுகோடி உயிர்களைப் பயந்த வண்ணம் காக்கும் கடம் பூண்ட நின் உழைப்பிலேயே நான் வாழ்வதா? ஐயகோ, வெட்கமாக இருக்கிறது. என்னைப் பொறுத்துக் கொள்!

நான் என்ன செய்ய வேண்டும் என்று எண்ணுகின்றேன்! உன்னிடமும் என்னைப் பணிகொள்ளும் வகை கேட்டறிந்து கொள்கிறேன்! நான் சிந்திக்கிறேன். நான் செய்கிறேன். நான் உழைக்கிறேன்.

இறைவா, நான் எனக்காகவும் இந்தப் பரந்த மானுட சாதிக்காகவும் உழைக்கிறேன். உழைத்தே உண்பது என்று உறுதி கொள்கிறேன். நின் திருவுளம் மகிழப் பல அற்புதப் படைப்புகளைச் செய்கிறேன்.

இறைவா, ஒரே ஒரு வேண்டுகோள்! என்ன இருந்தாலும் நான் ஒரு சிற்றுயிர்! என் பணியில் நான் சோர்ந்தால்-எய்த்துக் களைத்துப் போனால் நீ வந்து துணை செய்! நீ எனக்கு வழக்கமாக நுகரும் நிதிபோல் அல்லாது சேமநிநிதியாக இருந்தருள் செய்க! நீ எனக்கு எய்ப்பினில் வைப்பாக இருந்து வாழ்வித்தருள் செய்க!