பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/246

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

234

தவத்திரு குன்றக்குடி அடிகளார்





ஆகஸ்டு 5




நானும் நல்ல தமிழில் உனைப் போற்றி வழிபட அருள் செய்க!

இறைவா, மதுரைத் தமிழ்ச் சங்கத் தலைவா! நீ தமிழை ஆய்வு செய்தாய்! தமிழை வளர்க்கும் பணியில் உன் குடும்பம் முழுதும் ஈடுபட்டது! சங்கத்தில் தமிழ்ப் புலவனாகக் கவியரங்கேறினாய்.

பண் சுமந்த பாடற் பரிசு பெறக் கூலியாளாக மண் சுமந்தாய். காசு நித்தம் நல்கி இச்சை மீதுார நாளும் நற்றமிழ் கேட்டாய். ஏன் இறைவா? இவ்வளவும் தெரிந்தும் உன்னோடு பேச சமஸ்கிருதம் வேண்டுமாம்! இது என்ன நியாயம் ?

இறைவா, நீ முன்பெல்லாம் எளிவந்தருளித் திருவிளையாடல்கள் ஆற்றினை! நல்ல தமிழ் கேட்கலாம் என்றால் நீ விரும்பி முன் நின்றனை. இப்போதெல்லாம் உன்னை எத்தனை தடவை அழைத்தாலும் நீ வருவதில்லை. ஏன்? நீ மகிழ்ந்து பூரிக்கும் தமிழ் கேட்கும் வாய்ப்பினை இழந்த மையால் நீ வருவதில்லையா?

எந்த இடத்தில் எந்த உருவத்தில் நீ எழுந்தருளி ஆருயிர்களுக்கு அருள் வழங்கினையோ, அங்குக்கூட நீ இருக்கிறாயோ, இல்லையோ என்ற ஐயம் எழும் அளவுக்கு நீ மெளனம் சாதிப்பது ஏன்? இறைவா, நான் ஏழை! தமிழை மட்டுமே அறிந்த ஏழைப்பாவலன்! வடமொழி தெரியாது. எனக்கு மேட்டுக் குடியோடும் உறவில்லை. எனக்காக யாரும் பரிந்துரை செய்ய மாட்டார்கள்.

இறைவா, நான் கூறும் தமிழ் என் தமிழல்ல, அப்பரடிகள் அருளிய அருந்தமிழ்! நானும் நல்ல தமிழில் உனைப் போற்றி வழிபட அருள் செய்க! ஊன் கலந்து உயிர் கலந்து நின்னருளில் திளைத்து வழிபடும் வாய்ப்பினை வழங்குக!