பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/263

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

251





ஆகஸ்டு 22



இடர்களைக் கடந்து என் குறிக்கோளை அடைந்திட அருள்க!

இறைவா! அற்புதங்கள் இயற்றிடும் அண்ணலே! இறைவா! நீ, எத்தனையோ அற்புதங்களைச் செய்து வழங்கியிருக்கிறாய். இறைவா, என் வாழ்க்கைக்குரிய மூலங்கள் அனைத்தையும் நீயே வழங்கியிருக்கிறாய். அவற்றைப் பயன்படுத்திச் சிறப்போடு வாழ்தல் என் கடமை !

இறைவா, சிறப்பாக வாழும் முயற்சியில் மனித குலம் பலநூறு ஆயிரம் ஆண்டுகளாக முயன்று வருகிறது. ஆனால், கிடைத்த பலனோ மிகக் குறைவு.

இறைவா, இந்த உலகில் துன்பத்தைத் தொலைத்தல் இயலாது. பகையை அறவே மாற்றுதல் இயலாது. போர் ஒடுக்கம் நடக்கவே நடக்காது.

இறைவா, மானுடத்தின் வெற்றி நடவாத ஒன்று! என் வாழ்க்கையின் நிலை இதுதான். கொடுத்து வைத்தது அவ்வளவுதான். பிறப்பு எனும் சுழல் வட்டத்தில் சுழன்று வர வேண்டியதுதானா? வேறு வழியில்லையா? இறைவா, அருள் கூர்ந்து இன்னும் ஒரு தடவை அருளிச் செய்க!

இறைவா! இடர் வேறு, இயலாமை வேறு! ஆம் உண்மைதான். நான் என்னுடைய முயற்சிகளில் காணும் இடர்களைக் கண்டு, மலைத்து, இது ஆகாது என்று வாளா இருந்து விடுகிறேன். இது தவறு. இப்பொழுதுதான் வாழ்க்கையின் உண்மை புரிகிறது!

இறைவா, என் பணி சார்ந்த வாழ்க்கையில் இனி இடர்களைக் கண்டு கலங்கா மனம் அருள் செய்க இடர்களைதுன்பங்களைக் கடந்து சென்று, என் குறிக்கோளை நான் அடைய அருள் செய்க! என்னால் இயலாதது என்று ஒன்று இல்லை. இன்பமே எந்நாளும் துன்பமில்லை: இறைவா, அருள் செய்க!