பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/270

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

258

தவத்திரு குன்றக்குடி அடிகளார்





ஆகஸ்டு 29



காலங்கடந்து விடுகிறது என்ற உணர்வினைத் தந்து கடமைகளில் செலுத்துக இறைவா!

இறைவா, நீண்ட இடைவெளிக்குப்பின் உன்னை அழைக்கின்றேன். ஆம், இறைவா, இடையில் உன்னை நினைக்கவில்லை. ஆனாலும் மறந்தேனில்லை. இறைவா, நீ தான் காலங்களைக் கடந்தவனாயிற்றே? நீ, இதைப்பற்றிக் கவலைப் படுகிறாயா?

இறைவா, நீ காலத்தைப் பற்றிக் கவலைப்படுகிறாய். ஆம், எங்களுக்காக ஆம் இறைவா, கால தேவதை நிற்க மறுக்கிறாள். நானோ ஒத்திப்போடும் சுபாவமுடையவனாகின்றேன். இறைவா, நீ எல்லையற்ற கருணையுடைய வனாயிற்றே! நீ ஏன் எனக்குத் தாராளமாக வாழ்நாளைத் தரக்கூடாது?

இறைவா, என்ன சொல்கிறாய்! அளவிடற்கரிய காலம் தருவதில் உனக்கு ஆட்சேபணை இல்லையா? என்ன இறைவா, "ஆனால்..” என்கிறாய்! காலத்தைத் தள்ளுபவர்கள், கடமையைக் கடத்துபவர்கள், என்றும் எவ்வளவு நாள் கொடுத்தாலும் செய்ய மாட்டார்கள்.

இன்று, இப்பொழுது வாழாதவர்கள் நாளை, நாளை மறு நாள் வாழ்வார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? எப்போதும் "இன்று", "நாளை" என்பவர்கள் என்றுமே செய்யார்கள்.

இறைவா, நீ எங்களைக் காலக்கெடு என்னும் கத்தரிக்கோலில் நெருக்கி வாழச் செய்வது எங்கள் நன்மைக்கேயாம். ஆம், இறைவா! காலம் கடந்து விடுகிறது என்ற அறிவார்ந்த உணர்வை எனக்குத் தந்து கடமைகளில் செலுத்துக! வாழ்வித்திடுக!