பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/365

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

353






டிசம்பர் 2


இறைவா, அருள், என் வாழ்க்கையின் ஆக்கமாக அமையட்டும்! அருள் செய்க!

இறைவா, கயிலையைக் காணவேண்டும். கயிலையில் எழுந்தருளியுள்ள நின்திருக்கோலத்தைக் காணவேண்டும். இறைவா! உன் கோட்டையின் கதவுகள் சாத்தப்பட்டுள்ளன. பூட்டப்பட்டுள்ளன. அதைத் திறப்பதற்குரிய சாவியைத் தேடிக் கொண்டிருக்கின்றேன்!

இறைவா, நின் கோட்டையைத் திறப்பதற்குரிய சாவியாகிய அருள், வேண்டும். "அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை.” என்பது அருள்வாக்கு அருள்-அன்பினும் சேய். அன்பில்லாது அருள் வாராது.

அனைத்துயிர்களிடத்திலும் அன்பு காட்டுதல் என் ஒழுக்கமாக வேண்டும். என் வாழ்க்கையின் உயிர் நிலையாக அன்பு அமைதல் வேண்டும். அன்பை ஈன்று வளர்த்துப் பேணுவது உயிரிரக்கமாகிய பண்பாடே.

இந்த உலகத்தில் வாழும் அனைத்துயிர்களிடத்திலும் எனக்கு அன்புவேண்டும். எந்த உயிருக்கும் தீங்கு நினைக்கலாகாது. இறைவா! இந்தப் பாக்கியத்தினை எனக்கு அருள் செய்க!

வையம் உண்ட பிறகு உண்ணவும், வையம் உடுத்திய பிறகு உடுத்தவும் எனக்குக் கற்றுத் தா. துய்த்தலிலும் துறத்தலிலும் என்னை ஈடுபடுத்து. உயிரிரக்கம் என் வாழ்க்கையின் கொள்கையாகட்டும். அன்பு செய்தல் என் வாழ்க்கையின் ஒழுக்கமாகட்டும். அருள் என் வாழ்க்கையின் ஆக்கமாக அமையட்டும். இறைவா, அருள் செய்க!

கு.x.23