பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/366

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

354

தவத்திரு குன்றக்குடி அடிகளார்






டிசம்பர் 3


சமுதாய விதிக்கேற்ப நான் நடந்திட அருள்க!

இறைவா! நீதியே! நியதியே! நின்னருள் போற்றி! போற்றி! இறைவா, இந்த உலகின் இயக்கத்தில் எண்ணற்ற நியதிகள் உள்ளன. நியதிகளே உலக இயக்கத்தை நடத்துகின்றன.

இந்த உலக இயக்கம் நியதிகளின் வழி நடப்பது. இறைவா, என் வாழ்க்கை விதியின்வழி நடப்பது நடக்க வேண்டியது. விதி என்றால் என்ன இறைவா? “தலை விதி" என்று கூறுகிறார்களே, அந்த விதியா? இறைவா, என்னை மன்னித்து விடுக. நான் தலை விதியில் நம்பிக்கை இல்லாதவன்.

இறைவா, விதி நியதியைப் போன்றது; விதி என்பது வகுத்துக் கொண்ட வழிமுறை. என் வாழ்க்கையின் விதிமுறை, இந்த உலகத்தை இயக்கும் இயற்கையின் விதிமுறைகளுடன் இசைந்து நடக்க வேண்டும். இயற்கையோடிசைந்த வாழ்க்கையே வாழ்க்கை. இயற்கையோடிசைந்த வாழ்க்கையே இன்ப வாழ்க்கை.

இறைவா, நான் தனிமனிதன். ஆனால் ஒரு சமுதாயத் தில் ஓர் உறுப்பினனாக வாழ்கின்றேன். ஆதலால் என்னோடு வாழும் மற்றவர்களின் நலமே என் நலம். ஆதலால் அவர்கள் மகிழ்வதற்குரிய விதிமுறைகளே என் வாழ்க்கையின் விதிமுறை.

இறைவா சமுதாய வாழ்நிலையே என் விதி, என் வாழ் நிலை. ஒரு விதி இன்பத்திற்கு முரணாக இருந்தால், அந்த விதியைச் சமுதாய விதியாக மாற்ற வேண்டும். இதுவே என் வாழ்நாளின் விதி. விதித்துள்ள கடமை. இறைவா அருள் செய்க!

இறைவா, நாடு உவப்ப நடக்கும் விதிமுறைகள் உயர்ந்தவை; உய்தி தருபவை. அந்த உயர்ந்த விதிமுறையின் வழி என் வாழ்வியல் நிகழ அருள் செய்க!