திருவருட் சிந்தனை
33
ஜனவரி 17
|
இறைவா, மறைகளை ஓதிய உத்தமனே! சொல்லாமல் சொல்லி உணர்த்திய தலைவா! என் வாய், பேசியே அலுத்துப் போயிற்று! இனியனவே கூறுக என்றது வள்ளுவம்!
என் வாய், இனிப்பு-கற்கண்டு சுவைக்கத் தவிக்கிறதே ஒழிய, இனிய சொற்களை வழங்க மறுக்கின்றது. சளசள என்ற ஒரே “அரட்டைக் கச்சேரியே” என் வாழ்க்கை மயமாகி விட்டது! வாய்ச் சவடால்களுக்குக் குறைச்சல் இல்லை. ஒரே ஆரவாரம்! பேசும் வாய்க்கு நீ அமைத்த தடைகள் பயன் இல்லை. இறைவா, இந்த வாயினால் விளைந்த கலவரம், படுகொலைகள், துன்ப நிகழ்வுகள் ஏராளம். இறைவா, என் வாய் மாறியாக வேண்டும்! பொருள் நிறைந்த சொற்களையே வழங்குதல் வேண்டும்!
வையகத்தை ஒன்று சேர்க்கும் சொற்களையே சொல்லுதல் வேண்டும். அறந்தழீஇய சொற்களையே மொழிதல் வேண்டும்! நின் பொருள்சேர் புகழையே கூறுதல் வேண்டும். இறைவா, அருள் செய்க! வாய் வழாது துணை செய்யின் என் வாழ்வு சிறக்கும், வையகம் மேம்பாடுறும்! இறைவா, அருள் செய்க!!.
கு・X・3・