பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/63

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

51




பிப்ரவரி 4


இயற்கையோடிசைந்த வாழ்வே அறவாழ்வு!


இறைவா, உண்மையைச் சொல். உனக்கும் எனக்கும் என்ன உறவு? நீ எனக்குத் தந்ததெல்லாம் தண்டனை தானே! இறைவா, பசிக்கிற வயிறு ஏன்? பருவத்தில் தோன்றும் காதற்பசி ஏன்? இவையிரண்டும் இல்லாது போனால் நான் சுதந்தரமான பிறவி. இறைவா, என்ன சொல்கிறாய்? உண்மை தானே? இயங்காதவையெல்லாம் அழியும்! நீ ஓர் இயக்கம் மட்டுமல்ல; இயக்குபவனுமாவாய். இயக்கத்தின் அடையாளமே பசிதானே! நன்றாகப் பசியுள்ள உடல், நல்லுடல். பசித்து உண்பவனே யோகி. மானிடா, உன் இயக்கம் வெறும் வறட்சித் தன்மையுடைய இயக்கமாகிவிடக் கூடாது. அதில் அன்பு, காதல், கலை, அழகுணர்வு அனைத்தும் இருக்க வேண்டுமல்லவா?

அதனாலேதான் காதற்பசி! இது மட்டுமா? மானிடம் வளர வேண்டும். மேலும் மேலும் தொடர் ஓட்டமாகச் சிறந்து வளர வேண்டும். மானிடத்தின் வழிமுறையைப் பராமரிக்க வேண்டும். அதனாலும் காதற்பசி தேவை! இறைவா, உன் செயலில் தவறில்லை. எனது இயலாமையை மறைத்துக் கொள்ள முயலுகிறேன். வறட்சியான சித்தாந்தங்களைப் படைத்து உலாவ விடுகிறேன். இவையெல்லாம் நின் சித்தத்திற்கு முரண். இனி இயற்கையோடிசைந்த வாழ்வே அற வாழ்வெனக் கொண்டு வாழ்வேன்.