பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/66

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

தவத்திரு குன்றக்குடி அடிகளார்




பிப்ரவரி 7


என் அறிவைப் புலமாக்கி ஞான ஏர் உழுதிடுக!

இறைவா! வேண்டத்தக்கது அறிவோய் நீ வேண்ட முழுவதும் தருவோய் நீ இறைவா, நான் வேண்டுவன வெல்லாம் அருள் பாலிக்கவில்லையே. ஏன் இறைவா? என்ன சொல்கிறாய்? நான் வேண்டுவனவெல்லாம் அப்படியே கொடுத்தால் நான் பைத்தியக்கார மருத்துவமனைக்குப் போய்விடுவேனோ? இந்த உலகத்தில் ஏன்? என்னைப் பற்றி இப்படி ஒரு மதிப்பீடு வைத்திருக்கிறாய். இறைவா, ஆம் இன்னும் நான் சிறு பிள்ளைதான். நான் என்னைப்பற்றி அறியேன். இருகை யானையைப்போல் தான் உள்ளேன்.

இறைவா, நான் விரும்புவனவற்றை அருள் செய்க என்பது என் பிரார்த்தனையல்ல. நான் பெறுவதற்குத் தகுதியுடையவற்றைப் பெற அருள் செய்க! ஆனால் இறைவா, ஒரு நிபந்தனை. என் தகுதி குறைவாக இருந்தால் முதலில் தகுதியை எனக்கு அருள் செய்க! என்னை ஆளாக்கிடுக. கேளாதனவெல்லாம் கேட்க கருணை பாலித்திடுக. காட்டாதனவெல்லாம் காட்டிடுக. என் குணம் மூன்றையும் திருத்தி, சாத்துவிகமே யாக்கிடுக. நான் பெற விரும்புவதெல்லாம் தகுதியே. உய்யும் நெறியே! ஞானமே! இறைவா அருள் செய்க! நீ காலந்தாழ்த்தினாலும் பரவாயில்லை. என்னைத் தகுதியுடையவனாக்கிடுக. என் அறிவைப் புலமாக்கி ஞான ஏர் உழுதிடுக. இன்னே அருள் செய்க!