பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/86

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



பிப்ரவரி 27


புத்தி வழி நடக்க அருள் புரிக!


இறைவா! என்னே உன் அற்புத விளையாட்டு. ஆனால், உன் விளையாட்டு எனக்கு வினையாகவல்லவா இருக்கிறது. ஏன், இறைவா! என்னோடு இந்த மனத்தையும் படைத்தாய்? ஒருநாளும் ஒருபொழுதும் இந்த மனம் சொன்னதைக் கேட்பதில்லை. ஓர் இடத்தில் இருப்பதில்லை. என்னையும் ஊர்நாய் போலச் சுற்றி இழுத்தடிக்கிறது? எனக்கு மனத்தோடு கூட்டுவைத்த நின் திருவுள்ளத்தைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

இறைவா, என்ன சொல்கிறாய்? மனத்தைப் புத்தியினிடத்தில் ஒப்படைக்கச் சொல்கிறாய். புத்தி சொன்ன படி செய்யச் சொல்கிறாய். மனத்தின் வசத்தில் வாழ்ந்திடல் வேண்டாம்; புத்தி சொல்லுவதுபோல நட என்கிறாய். சரி, இறைவா! அப்படியே நடக்கிறேன்.