பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/92

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

தவத்திரு குன்றக்குடி அடிகளார்






மார்ச் 4


எனக்கு உடனடித் தேவை ஒரு தோழன்! அருள் செய்க!

இறைவா! திருவாரூரில், தேரோடும் வீதியில் நடந்த இறைவா, உன் தோழர் ஆரூராரின் நினைவுகளை நிறைவேற்ற நடந்த இறைவா! உன் தோழமைப் பண்புகளை எண்ணி-எண்ணி என் நெஞ்சம் உருகுகிறது. நான் உருகி என்ன பயன்? மகிழ்ந்துதான் என்ன பயன்? நானும்தான் பலரிடம் தோழமை கொண்டேன். என் தோழமை ஊற்றமாக இல்லையே. இறைவா! நான் தோழமைப் பண்புகள் சிறிதும் பெற்றேனில்லை. எனக்கு ஊர் மெச்ச, உலகு மெச்சப் பல தோழர்கள் உள்ளனர். ஆனால், நின் தோழமைப் பண்பை நான் பெற்றேனில்லை. இறைவா! நின் தோழமைப் பண்புகளைப் பெற எனக்கும் ஆசை. இறைவா அருள் செய்க.

"தோழன் தோளுக்கு நிகர்” என்பர். என் தோள் எனக்குத் தப்பாது என் உழைப்பிற்குத் துணை நிற்பது போல-பங்கேற்பதுபோல-என் தோழன் விளங்க அருள் செய்க! இறைவா, நானும் என் தோழனுக்குத் துணையாக இருக்க அருள் செய்க! இறைவா, என்னுடைய உள்ளுணர்வுகளைக் கலந்து பேசிப்பகிர்ந்து கொள்ளக் கூட ஒரு தோழன் கிடைக்கவில்லையே. இறைவா-என்னிடம் சிலர் இருக்கின்றனர். ஆனால், அவர்கள் நெருக்கமாக வரவே கூசுகின்றனர்-எனக்கு உடனடியான அவசரத்தேவை ஒரு தோழன். இறைவா அருள் செய்க! அப்படி உன்னால் ஒரு தோழனை எனக்கு அனுப்ப இயலாது போனால் ஒரு விண்ணப்பம். இறைவா கோபிக்காது திருவுளம் பற்றவேண்டும். நீயே எனக்கும் தோழனாக வந்து உதவி செய்தால் என்ன? இறைவா அருள் செய்க!