பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/118

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வலிமை பெருக்குக! அறிக!

மனிதன் தனது வாழ்க்கைப் பயணத்தை இனிதே நிறைவேற்றி முடிக்க வேண்டுமானால் பிறர் வலிமையை ஆய்ந்தறிவதுடன் தன் வலிமையையும் பெருக்கி வளர்த்துக் கொள்ள வேண்டும். வலிமையில்லா வழி, வளம் குன்றும்; புகழ் பெறுதலரிது: இறை நிலையையும் எய்துதலரிது; ஆதலால் நாள்தோறும் தம் வலிமையறிந்து மேலும் மேலும் காலத்தின் தேவைக்குரிய அளவுக்கு வலிமையைப் பெருக்கி வளர்த்துக் கொள்ளவேண்டும். வலிமையில்லா வாழ்க்கை ‘நடலை வாழ்க்கை’. வலிமையில்லாதவருக்கு ஏமம் இல்லை; இன்பம் இல்லை. ஆதலின் பெறவேண்டிய வலியறிக. அவ்வலிமையைப் பெற்று உயர்க என்று மனிதனை வழி நடத்துகின்றார் வலியறிதல் என்ற அதிகாரத்தின் மூலம் திருவள்ளுவர்.

உள்ளம் உடைமை உடைமை

மனிதன் அறிவைப் பெற்றான்; காலத்தினை அறிந்து ஆராயும் இயல்பினைப் பெற்றான்; வலிமையையும் பெற்றிருக்கின்றான். ஆயினும் அவனை உந்திச் செலுத்தி வளர்க்கும் ஊக்கமில்லா வழி, உரிய பயன்வராது. ஊக்கமென்பது உள்ளத்தின் எழுச்சி; பள்ளம் நோக்கிப் பாய்ந்துவரும் புனல்போலப் பணிகளையே நோக்கி விரையும் உள்ளத்து எழுச்சி, இயல்பான வாய்ப்புக்களின்மை குறையல்ல. வாய்ப்புக்கள் வந்தமைவனல்ல. மனிதன் படைத்துக் கொள்பவை. வாய்ப்புக்களைப் படைத்து வழங்கும் அறிவறிந்த ஆள்வினை வேண்டுமென்றார் திருவள்ளுவர்.

பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்(து)
ஆள்வினை யின்மை பழி[1]

  1. திருக்குறள், 618