பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/168

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

164

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இவ்வுரையைச் சிவசமவாத உரை என்று கூறி மறுப்பாரும் உண்டு. பெரிய புராணத்திற்கு விரிவுரை கண்ட ஆறுமுகத் தம்பிரானைப் பெற்றது என்ற பெருமைக்குரியது. இத்திருமடத்தில் வழி வழி பல முனிவர்கள் பல அருள்ஞான நூல்களைச் செய்துள்ளனர்.

இன்றும் இந்தக் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் ஒன்றும் வகையிலெல்லாம் பணி செய்து வருகிறது.

அடுத்து, நமசிவாய மூர்த்தியை ஞானாசிரியராகக் கொண்ட திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனம் ஆகும். நுண்ணிதின் அமைந்த சிவஞான போதத்தை எல்லாரும் கற்கும் வகையில் பேருரையாக்கித் தந்த மாதவச் சிவஞான முனிவர் இந்த ஆதீனத்தைச் சேர்ந்தவர் என்பது இந்த ஆதீனத்தின் பெருமைக்குச் சான்று.

திருவாவடுதுறை மடம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் எழுச்சிக்குத் துணையாக இருந்த மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை, தமிழ்த் தாத்தா டாக்டர் உ. வே. சாமிநாதயர் முதலியவர்களுக்குக் களமாக அமைந்தது என்பதைத் தமிழுலகம் அறிந்து பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறது. இத் திருமடத்தில் செந்தமிழ்ப் புலமையும் சிவஞானமும் கைவரப் பெற்றவர்கள் வழிவழியாக அருளாட்சி செய்து வருகின்றனர்.

இன்று இத்திருமடத்தின் ஞானத்தலைவராக எழுந் தருளியுள்ள மகாசந்நிதானம் திருவருள் திரு. அம்பலவான தேசிய பாரமாசார்ய சுவாமிகள். அவர்கள் நல்ல ஞான நூல்களை அச்சிட்டு வழங்கியும், சமய, இலக்கிய மாநாடுகளை நடத்தியும் செய்து வரும் பணிகள் பாராட்டுதலுக்குரியன.

சைவத் திருமடங்களில் சிறப்புடையதாக விளங்கி நின்று தொண்டு செய்து வருவது திருக்கயிலாய பரம்பரைத் தருமபுரம் ஆதீனமாகும்.