பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/214

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

210

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


துய்ப்புக்குரிய பொருள்களைப் படைத்தலும், பலரோடு கூடித் துய்ப்பித்துத் துய்த்தலும் சிறந்த சமய வாழ்க்கை துய்த்தல் மட்டுமே நிகழும் வாழ்க்கை குறையுடையது. துய்ப்பித்துத் துய்த்தல் வாழ்க்கையே சிறப்புடைய வாழ்க்கை. துறவு என்பது, எல்லாருடைய வாழ்க்கையிலும் ஒரு பகுதியாக அமைந்தது. பழந்தமிழர் வாழ்வுமுறை துறத்தல் வழித் துய்க்கும் வாழ்க்கையே. அதுவே சைவ வாழ்க்கை; திருத்தொண்டர் புராணத்தின் சாரம் இதுவே. “பொருள்கள் நிலையில்லாதன” என்பது, பொருள்கள் அழியும் என்ற கருத்தில் தோன்றியதன்று. பொருள்களுக்கும் உயிர்களுக்கும் உள்ள தொடர்பு நீங்கும் என்பதே அதன் பொருள். பொருள்களைப் படைத்தலும் துய்த்தலும் சமய வாழ்வுக்குத் தடையன்று. உண்பதற்காக வாழ்ந்து கழுபிணி தேடிக் கொள்ளுதல் கூடாது. வாழ்வதற்காக உண்ண வேண்டும். முறையாக நற்குணங்களைத் தரக்கூடிய சத்துள்ள உணவை உட்கொள்ள வேண்டும்.

ஆதலால், உலகியல் துய்ப்புகளை உய்யும் நெறிகள் எனக்கொண்டு சிவ சிந்தனையோடு துய்ப்பித்தும் துய்த்தும் வாழ்தலும் ஒரு தவமேயாகும். துய்க்கும் பொருள்கள் எல்லாவற்றையும் சிவமாகவே கருதிப் போற்றியிருக்கிறார் அப்பரடிகள்.

அப்பன்நீ அம்மைநீ ஐய னும்நீ
அன்புடைய மாமனும் மாமி யும்நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொரு ளும்நீ
ஒருகுலமும் சுற்றமும் ஒரு ரும்நீ
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்று வாய்நீ
துணையாய்என் செஞ்சம்து றப்பிப் பாய்நீ
இப்பொன்நீ இம்மணிநீ இம்முத் தும்நீ
இறைவன்நீ ஏறூர்ந்த செல்வன் நீயே.

(அடங்கன்முறை : ஆறாம் திரு. 1173)