பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/272

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

268

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வான்மழை வழாது பெய்க;
மலிவளம் சுரக்க; மன்னன்
கோன்முறை அரசு செய்க;
குறைவிலாது உயிர்கள் வாழ்க;
நான்மறை அறங்கள் ஓங்க;
நற்றவம் வேள்வி மல்க!
மேன்மைகொள் சைவ நீதி
விளங்குக உலக மெல்லாம்.

இத் திருப்பாடல் சமுதாயத்தின் அனைத்துத் துறைகளையும் தழுவியதாக அமையவில்லையா? ஒன்றிலிருந்து ஒன்றாக விளைந்து சமயம்-நீதி என்ற பெருவாழ்வில் சென்று முடியவில்லையா? நாள்தோறும் இந்த வாழ்த்துப் பாடல் ஒலிக்கப்பெறுகிறது. ஆனால், “குறைவிலாது உயிர்கள் வாழ்க” என்பதன் பொருள் நமது இதயத்தில் பதியவில்லை. வாழ்த்தினால் போதுமா? வாழ வைக்க வேண்டாமா? அன்பு - கூர்ந்து எண்ணுங்கள்! ஏன்? நமது திருஞானசம்பந்தர்,

வாழ்க அந்தணர்; வானவர் ஆனினம்;
வீழ்க தண்புனல்; வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல் லாம்; அரன் நாமமே
சூழ்க; வையக மும்துயர் தீர்கவே!

என்று அருளிச் செய்த பாடலும் இதே குறிப்பினைத்தானே உணர்த்துகிறது! தீமைகள் அழிய வேண்டுமல்லவா? தீமைக்குக் காரணமாக இருக்கின்ற வேற்றுமை, பகை, வறுமை முதலியன அழியாமல் எங்ஙனம் தீமை ஆழும்: அன்பு கூர்ந்து இந்தப்பாடல்களுக்குச் செயலுருவம் கொடுக்கவும் வாழ்க்கையில் விளக்கம் காணவும் முயற்சிப்போமாக!