பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/279

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கொடியா? கொம்பா?

275


அரசியலில் சட்டம் இருப்பினும் தவறுகள் எப்படிக் குறையவில்லையோ, அதுபோலவே தூய சமய வாழ்வு மேற் கொண்டவர்களிடத்தும்கூடச் சூழ்நிலையின் காரணமாகத் தவறுகள் நிகழலாம்-நிகழக்கூடும். அவ்வப்போது சூழ்நிலையை மாற்றியமைத்துத் தவறுகளைத் திருத்தி மனித வாழ்வை ஆக்குவதே சமய நெறியின் கடமையாக இருக்கிறது.

வள்ளுவரைக் கேட்டால்...

வள்ளுவர், “மன்னவன் கோல்நோக்கி வாழும் குடி” என்றே சொல்லுகிறார். “சமயம் நோக்கி வாழும் குடி” என்று சொல்லவில்லை; ஆதலால் அரசியலே மிக மிக உரியது என்று கூறினார்.

திருவள்ளுவர் நூலின் முகப்பிலேயே முதல் அதிகாரத்திலேயே முதற் குறளிலேயே,

ஆதிபகவன் முதற்றே உலகு

என்றே தொடங்குகிறார். திருவள்ளுவர் சமுதாயத்தின் பல்வேறு கொள்கைகளைப் பல்வேறு அறங்களாகத் தனித்தனி அதிகாரங்களாகப் பிரித்துக் குறள் செய்துள்ளார். அந்த அந்த அதிகாரத்தில் அந்த அந்தக் கருத்தை வலியுறுத்துகிறார். கடவுள் வாழ்த்தில் இறைவனைச் சிறப்பித்துப் பேசுகிறார்; அரசியலில் அரசனைச் சிறப்பித்துப் பேசுகிறார். இதிலும்கூட ஆழமாகச் சிந்தித்தால், “மன்னவன் கோல்நோக்கி வாழும்” என்பதைவிட, “உலகிற்கு முதல் ஆதி பகவன்” என்பதே வலிமையுடையதாகத் தோற்றமளிக்கிறது. அரசனை அறவழி ஆற்றுப்படுத்தும் நோக்கத்தோடு,

மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்
அதனால் யானுயிர் என்பது அறிகை
வேன்மிகு தானை வேந்தர்க்குக் கடனே