பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/349

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழும் சமயமும் சமுதாயமும்

345


அன்பு உயர்ந்தது என்று உலகத்தில் சொல்லப் பட்டாலும்; அறிவு மிக உயர்ந்தது. காரணம், அதுதான் காலத்தை வென்று நிற்பது; எல்லைகளைக் கடந்து நிற்பது, எப்பொழுதும் அன்பு காட்டுவதற்குத் துணையாக நிற்பது என்பதையும் நினைவூட்டி, நம்முடைய வாழ்க்கையில் தகுதியில்லாதவற்றைக் கண்டு மயங்கி நிற்பதற்குப் பதிலாக, தகுதியுடையன எவை என்று கண்டு அவற்றைப் போற்றி வாழ்கின்ற வாழ்க்கை வாழ்ந்திட வேண்டும். சிறந்த வாழ்க்கை என்பது நல்லதோர் வீணை எடுத்து மீட்டுவதைப் போல, நல்ல வீணை மீட்டுவதன் மூலம் எல்லோருக்கும் மகிழ்ச்சி. எல்லோரும் கேட்டு மகிழ்வார்கள், சமயவாழ்க்கை என்பது, வாழ்க்கையைச் சமைத்துப் பக்குவப்படுத்துவது. எப்படி நெல்லை நனைத்தும், காயப்போட்டும் பக்குவப் படுத்துகிறோமோ, அதேபோல, உயிர்களை அன்பிலே நனைத்துத் தொண்டினால் வருகின்ற துன்பத்தில் காயப் போட்டு, வாழ்க்கையைத் தரப்படுத்துங்கள்; தகுதிப் படுத்துங்கள்.

உலகம் இன்று விஞ்ஞானத்தால் இணைக்கப்பட்டு வருகிறது. ஆனால், ஆன்மீக உலகத்தால், சமய உலகத்தால், மனித உலகத்தினுடைய இதயங்கள் இணைக்கப் படாமையின் காரணமாக, நீர்வாயுக்குண்டு என்ற அழிவு உலகத்தினுடைய உச்ச கட்டத்தில் வந்து நிற்கின்றது. அழிவு வாயிலிலிருந்து, மனித உலகத்தைக் காப்பாற்ற வேண்டியது ஆன்மீகத்தின் பொறுப்பு. சமயத்தின் பொறுப்பு. உலகம் அழிந்துபடாமல் கடவுளின் நெறியில் படைக்கவும், காக்கவும், காப்பாற்றவும் நாம் முயற்சிக்க வேண்டும். அந்த அழிவற்ற ஆற்றலை-சக்தியை நாம் ஒன்றியிருந்து வழிபாடு செய்வதன் மூலம், தமிழில் வழிபாடு செய்வதன் மூலம் நாம் பெற்று, நம்முடைய தரத்தையும், தகுதியையும் உயர்த்தி, உலகத்தை அமைதியாக வாழ்விப்போம் என்று கூறி, வாழ்த்தி விடைபெற ஆசைப்படுகிறோம்.