பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/400

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

396

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கனிகளாகவும் திகழ்கின்றன. பத்திச்சுவை நனிசொட்டச் சொட்டப் பாடிய நமது நாயன்மார்களின் பாடல்கள், பரமன்பதம் நாடுவதற்கும், பரமன் விரும்பும் செயல்களைச் செய்வதற்கும் தூண்டுகோல்களாய்த் தோன்றுகின்றன. நாளுக்கு நாள் நாழிகைக்கு நாழிகை-அவகாசங் கிடைக்கும் போதெல்லாம் திருமுறைகளைப் படித்து அனுபவித்தால் இனிய பரிபூரண் ஆனந்தத்தில் திளைக்க முடியும் என்பதற்கு எள்ளளவும் ஐயமில்லை. நெஞ்சைத்திறந்து நேசத்தைப் பெருக்கி அகத்தில் ஊற்றெடுக்கும் அன்பினை வெளிக் கொணர்ந்து அறமானவைகளைச் செய்து அருட் செல்வர்களாக வாழவைப்பவை திருமுறைகள். இறையருளால் இன்னல் களைந்து இன்பமடைந்து இறும்பூதடையச் செய்வதோடு சிவனைப் பற்றியும் சிவனருள் ஆர்ந்த செல்வர்களைப் பற்றியும் - சிவத்தலங்களைப் பற்றியும் தெளியத் திருமுறைகள் உதவுகின்றன.

சைவத் திருமுறைகள் பன்னிரண்டும் சைவப் பெருமக்களுக்கு வாய்த்த தெய்வத்தமிழ் வேதமாகும். இறைவன் எல்லா உலகத்திலும் இருப்பவன்; அவனுக்குத் தென்னாட்டிலே அருமையான செல்லப் பெயருண்டு. அதுதான் சிவன் என்பது. “தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்ட வர்க்கு மிறைவா போற்றி” என்கின்றார் மணிவாசகர். தென்னாட்டிலே சிவனாகக் கருதப்படுகின்ற நமது கடவுள் நாம் வாழ நமக்கு இடையூறாய் இருப்பவைகளைத் தானே எடுத்துக்கொண்டார். இதிலிருந்து இறைவனின் தாய்மை நிலையை எளிதில் உணர்ந்து கொள்ளலாம். பாம்பும் புலித்தோலும் பார்க்குமிடத்து எவர்க்கும் தேவையற்றவை. அவற்றினை அவரே எடுத்துக் கொண்டார். குழந்தையின் நன்மையையும் வளர்ச்சியையும் குறிக்கொண்டு காக்கும் ஒர் உத்தமமான தாய் பத்தியமாக இருப்பது போலவே ஆன்மாக்களைப் பொறுத்தவரை அண்ட சராசரம் அனைத்தையும் ஈன்று புறந்தரும் அன்னையாக ஆண்டவன் இருக்கின்றான்.