பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/444

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

440

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஆகவே, ஆவியோடாக்கை புரை புரை கனிய எம்பெருமானை நாம் வழிபடவேண்டும். நாம் ஆண்டவனை நோக்கிக் கைதொழுதால் அவன் நமது தொழுகையை அறிந்து அருள் பாலிப்பான். திருமுறைக்காலத்துச் சைவ சமய நிலையை உருவாக்கப் பெரியபுராணம் ஒன்றே போதும். நமது சமயவாழ்வோ, சமய அனுபவமோ சேக்கிழார் அளவுக்கு இல்லை. சேக்கிழார் சுந்தரர் வாழ்வை உலக நடைமுறைப்படுத்தினார். இன்று கண்ணப்பர் காலமில்லை. ஆதலால் கண் தேவைப்படாது. தேவைப்படினும் கண்வங்கிகளில் பெற்றுக்கொள்ளலாம். கண்ணப்பர் குருபூசை நாளன்று கண்பார்வை இழந்தவர்களுக்குக் கண்ணாடி வாங்கிக்கொடுக்கலாம். இயற்பகை நாயனார் குரு பூசையின் போது வசதி இல்லாமையினாலே திருமணமாகாதிருக்கும் ஏழைகள் நாலுபேருக்குக் கோவிலிலே திருமணம் செய்து வைத்தாற் போதும் திருக்குறிப்புத் தொண்டர் திருநாளில் ஏழைக்கு உணவுப் பாத்திரம் கொடுக்கலாம்; ஏழை பணக்காரர் என்ற பாகுபாட்டினை மாற்றவேண்டும். பிட்டுக்கு மண் சுமந்தான் என்பதை, மண்சுமந்தான் பிட்டுக்கு என்று மாற்ற வேண்டும். இக்காலத்தவர் பிட்டுக்கு மண்சுமந்த கதையைப் படித்துவிட்டுப் பிட்டை உண்கிறார்களே யொழிய மண்சுமத்தலை நினைப்பதில்லை. எனவே தொண்டை முன்னும் உண்டியைப் பின்னுமாக மாற்றிக் கொள்ள வேண்டும். இன்று கிணறு தோண்டல் வீதி அமைத்தல் ஆகிய சிரமமான முயற்சிகளை நாம் மேற்கொள்ளலாம். சுவாமியை வீதிவலமாக எழுந்தருளச் செய்து, கொண்டுபோய் வைத்துப் பிட்டினைத் திருமுன் நிவேதித்துச் சிரமதானத்தின் பின்பு புனிதமான பிரசாதமாக உண்ணலாம். கற்பனைக்கு அப்பாலான வாழ்க்கை அனுபவந்தான் பெரிய புராணம். வான் முகில் வழாதுபெய்து, நீர் வளம்பெருகி, மலிவளம் சுரந்து அரசு அருள்நெறி வழிப்பட்டு இயங்கி, யாதொரு குறையுமின்றி உயிர்கள் வாழ்தலே சாலச் சிறந்ததாகும் எனக்கூறி வாழ்த்தி விடைபெறுகின்றோம். வணக்கம்.