பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/65

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நமது நிலையில் சமயம் சமுதாயம்

61


திருஞான சம்பந்தர் வேத நெறி தழைத்தோங்கத் தோன்றியவர்: சைவ நெறி விளங்கத் தோன்றிய ஞாயிறு. அவர் பாடிய திரு இராமேச்சுரத் திருப்பதிகத்தில்,

தேவியை வவ்விய தென்னிலங் கைத்தச மாமுகன்
பூவிய லும்முடி பொன்றுவித் தபழி போயற
ஏவிய லுஞ்சிலை யண்ணல்செய் தவிரா மேச்சுரம்
மேவிய சிந்தையி னார்கள்தம் மேல்வினை விடுமே[1]

என்ற திருப்பாடலில் வில்லினைத் தாங்கிய அரச (க்ஷத்திரிய) மரபைச் சார்ந்த இராமன் பூசித்த வரலாறு கூறப்படுகிறது.

அப்பரடிகள் திருவையாற்றுத் திருப்பதிகத்தில் பக்தர்கள் வழிபாட்டுக்காகப் பூவும், நீரும் சுமந்துகொண்டு ஒழுங்கு வரிசையில் நிற்பதையும், தாம் அவர்கள் பின்னே நிற்பதையும் குறிப்பிடுகின்றார்.

மாதர்ப் பிறைக்கண்ணி யானை
மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர்சுமந் தேத்திப்
புகுவார் அவர்பின் புகுவேன்[2]

என்பது அவர் திருப்பாடல்.

திருப்பனந்தாளில் தாடகை என்னும் பெண் நாள் தோறும் மலர் சாத்தி வழிபட்டதாக வரலாறு இருக்கிறது.

சேக்கிழாரின் பெரிய புராணத்தில், கண்ணப்ப நாயனார் வரலாறு குறிப்பிடத்தக்கது. அநேகமாகக் கண்ணப்பநாயனாரின் வரலாற்றுக் காலம், திருக்கோயில்கள் தோன்றி நாட்பூசனைக்காக ஆசாரியர்கள் நியமிக்கப் பெற்றிருந்தும் பொதுமக்கள் வந்து வழிபாடு செய்து கொள்ளும் உரிமையைப் பெற்றிருந்த காலமாக இருத்தல் வேண்டும். ஏனெனில், திருக்கோயிலில் நாட்பூசனைக்காக நியமிக்கப்பெற்ற சிவகோசரியாரும் முறையே ஆகம வழியில் பூசிப்பவர் என்பதைச் சேக்கிழார்,

  1. திருஞானசம்பந்தர், திருவிராமேச்சுரப்பதிகம், 2.
  2. திருநாவுக்கரசர், நான்காந்திருமுறை, 31.