பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/124

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



மார்க்சியம் தோற்றம் - வளர்ச்சியின்மையின் காரணமாக அறிய வேண்டியவற்றை அறிவதற்குரிய, வாய்ப்பின்மையின் காரணமாகவுள்ளது ‘அறியாமை’ என்று கூறுகிறது. சைவ சித்தாந்தத்தின்படி அறியாமை இயற்கையிலேயே உள்ளது. மார்க்சியத்தின்படி அறியாமை இயற்கையன்று; வாய்ப்பின்மை காரணமாக ஏற்பட்டது அறியாமை. இந்த வேறுபாடு மிகப்பெரிய விளைவுகளை அல்லது எதிர் விளைவுகளை உருவாக்கி விடுவதற்குரியதன்று. அதனால், இந்த வகையில் வேறுபாடு இல்லையென்றே கருதினாலும் தவறன்று. அறியாமை. என்பதற்கு இரண்டு தத்துவங்களிலுமே பெரும்பாலும் ஒரே பொருள்கொள்ளப் பெறுகிறது. அறியாமை என்பது ஒன்றும் தெரியாமையன்று. ஒன்றைப் பிறிதொன்றாக முறை பிறழ அறிதலே அறியாமை என்று கருதப்படுகிறது. உயிர் நல்லறிவு வழிப்படவேண்டும் என்பதில் இரண்டு தத்துவ இயல்களும் ஒத்த நிலையினவேயாம், மார்க்சியத்தின் தோற்றத்திற்குக் காரணம் ஐரோப்பிய நாடுகள், மற்ற நாடுகளின் வரலாற்றுப் போக்குகளேயாம். மார்க்சிய தத்துவ ஞானத்தின் தோற்றத்திற்குக் களம், மனித குல வரலாறேயாம். இந்த மனித குல வரலாற்றில் பண்ணை அடிமைமுறை, முதலாளித்துவம் ஆகியன மனித குலத்தைக் கொச்சைப்படுத்தி, இழிவுபடுத்தி, நடைப் பிணங்களாக்கிய கொடிய நிலையை மாற்றும் நோக்கத்தில் மார்க்சிய தத்துவ ஞானம் தோன்றியது.

சைவ சித்தாந்தம், “உயிர்கள் படைக்கப்பட்டனவல்ல; என்றும் உள்ளன; தோற்றமும் அழிவுமில்லாதன; உயிர்கள் பல; அவை கல்வி கேள்வியால் அறிவு பெறுவன; அறிவித்தால் அறியும் தகுதியுடையன, உயிர்கள் மகிழ்ந்து வாழும் இயல்பின” என்றெல்லாம் கூறுகின்றது. மார்க்சியமும் உயிர்க் குரிய இந்த இயல்புகளை உடன்பட்டே நிற்கிறது. ஆனால், சைவசித்தாந்தம் உயிர்களின் அறிவை சிற்றறிவு என்று எல்லை கட்டுகிறது. மார்க்சியம் மனித அறிவின் மாட்சிக்கு எல்லை கட்டவில்லை.