பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/133

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆலயங்கள் சமுதாய மையங்கள்

121


கிறது. இவை அப்பட்டமான சுயநலம் படைத்த மனிதர்களின் ஏற்பாடு. பிற்காலச் சமய நூல்களில் இந்த ஏற்பாட்டுக்கு மறுப்பு இல்லாமல் இருக்கலாம். அதனால் இந்தமுறை புனிதமாகிவிடாது.

“ஊழ்” என்கிற சொல் “ஊழ்த்தல்” என்கிற சொல்லின் அடிப்படையில் பிறந்தது. ஊழ்த்தல் என்றால் விளங்கத் தோன்றுமுதல் என்பது பொருள். உயிர், நேற்று-நேற்று முன் தினம் தொடர்ந்து வாழ்ந்த முறை, இயற்றிய செயல், முயற்றிய வினை ஆகியவற்றின் உணர்வு உயிரிடத்தில் இயல்பாக விளங்கித் தோன்றுவது இயற்கையே. இதனைத்தான் பழக்கம் என்பர். பழக்கத்தின் காரணமாக வேம்பை இனிப்பாகவும், கரும்பைக் கசப்பாகவும் துய்க்கும் புழுவினைக் காண்கிறோம். அதனால்,

“பழக்கம் தவிரப் பழகுவ தன்றி உழப்புவ தென்”27

என்று திருவந்தியார் அறிவுறுத்திற்று. எனவே முன்னேற்றத்திற்குப் பயன்தராத பழக்கங்களால் வந்தமையும் உணர்வின் வழியதாகவே வாழ்தல், வாழ்க்கைக்குத் துணை செய்யாது; பயன்தராது என்று ஒருவன் தெளிந்து துணிவானானால் அந்த உணர்வை மாற்றமுடியும் என்பதே சித்தாந்தத்தின் முடிவு. மனிதனின் அறிவறிந்த ஆள் வினையைவிட ஊழ், வலிமையுடையதன்று. ஆதலால் வினை, விதி, ஊழ் என்கிற சொற்கள் உணர்த்தும் தத்துவத்தின் வழி ஒருவனது உழைப்பின் உபரியை மற்றவன் எடுத்துக்கொள்வதைச் சைவசித்தாந்தம் ஏற்கவும் இல்லை. அங்கீகரிக்கவும் இல்லை. மாறாக, வினையின் பயன், செய்வதனையே சாரவேண்டும் என்று ஐயத்திற்கிடமின்றிக் கூறுகிறது. அதாவது வினையின் விளைவு நன்மையாக இருந்தாலும், தீமையாக இருந்தாலும் அவரவர்களையே சாரும். இதனை, தருமையாதீனக் குருமுதல்வர் குருஞானசம்பந்தர்,

கு.XII. 9.