132
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
சைவசித்தாந்தமும் ஆன்மா அல்லது உயிர், சார்ந்ததன் வண்ணமாகிறது என்று கூறுகிறது. உயிர், உலகத்தைச் சார்ந்திருந்தால் உலகியல் தன்மையும் திருவருளைச் சார்ந்திருந்தால் அத்தன்மையும் பெற்று விளங்குகிறது என்று சைவ சித்தாந்தம் கூறுகிறது. சேக்கிழார், திருப்புகலூரில் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், முருகநாயனார் இம்மூவரும் ஒருங்கிணைந்த காட்சியை எடுத்துக் கூறும் போது,
- “உடனுறைவின் பயன் பெற்றார்”46
என்று கூறுகிறார். இஃது ஓர் அருமையான சமூக விஞ்ஞானச் சொற்றொடராகும். ஒருவர், மற்றொருவரோடு சேர்ந்துவாழ்ந்தால், அங்ஙனம் சேர்ந்துவாழ்ந்ததன் பயனை அடைந்தால் தான் சேர்ந்து வாழ்ந்ததற்குப் பொருள் உண்டு. அதாவது ஒவ்வொருவருடைய தன்மையும் - அறிவு, ஆற்றல், பண்பாடு, பயன்கொள்ளுதல் ஆகியன அனைத்தும் பன்மடங்கு பெருகி வளர்ந்தால்தான் உடனுறைந்தனர் என்பதற்குப் பொருள் உண்டு. ஆதலால், உயிர் எதைச் சார்ந்திருக்கிறதோ அதன் வண்ணமாகவே அமைகிறது என்பதைப் பொருள் முதல்வாதத் தத்துவத்தோடு ஒத்துப் பார்த்தால் பெரிய முரண்பாடு இல்லை என்றே தோன்றுகிறது.
செயற்பாடு வேண்டும்
இங்ஙனம் சைவ சித்தாந்தத்தையும் மார்க்சியத்தையும் ஒத்துப்பார்த்ததில் இவ்விரண்டு தத்துவங்கள் கடவுள் நம்பிக்கையில் முற்றாக மாறுபடுகின்றன; மறுபிறப்புக் கொள்கையில் ஓரளவு வேறுபடுகின்றன; அறிவின் பயன் காண்பதிலும் வேறுபாடு இருக்கிறது; ஆனால் இந்த வேறுபாடுகள் மனித குல மேம்பாட்டுக்குரிய பணிகளைச்