பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/154

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வேண்டிய வரிசை முறைப்படி இங்கே முறைப்படுத்தப்படவில்லை. பயனை முதலிற் சொல்லி பயனடைவதற்குரிய சாதனங்களைப் பின்னே சொல்லும் முறையால் அமைந்துள்ளன.

புகழ்பட வாழ்தல் குறிக்கோளில் ஒன்று. புகழ், எளிதில் கிடைக்காது. இன்று விளம்பரத்தைச் சிலர், புகழ் என்று கருதிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவர் வாழ்க்கையின் மூலம் பயனடைவோர் தம் உள்ளம் மகிழ்ந்து நெகிழ்ந்து கூறுதலே புகழ். பிறிதொரு வகையாகவும் புகழுக்கு அடையாளம் காணலாம். ஒருவர் சமுதாயத்திற்கு இன்றியமையாதவராக அவர் உள்ள பொழுதும் அவர் மறைந்த பொழுதும் உணரப்படும் நிலை; புகழ் வாழ்க்கையின் அளவு கோல்! வாழ்க்கை முழுமையாகப் பயன்பட்டதென்பதற்கும், சமுதாயம் பயன் கொள்ளத் தக்கவாறு அமைந்தது என்பதற்கும் அடையாளம் புகழ்பூத்த வாழ்க்கையே யாம். வளமான வாழ்க்கையின் முடிவு, புகழ்! அந்தப் புகழ்தொடர்ந்து வாழ்வியலில் நடத்தும் போராட்டங்களால் உருவாவது சாதனையால் தோன்றுவது; காலத்தை வென்று விளங்குவதன் மூலம் அடையக் கூடியதே புகழ்.

புகழ்பட வாழ்தலை உயிர்க்கு ஊதியம் என்று வள்ளுவம் போற்றும். புகழ்மிக்க வாழ்க்கையில்தான் நிலை பெற்று வாழ்கின்ற சாக்காடு வந்தமையும். புகழ் பெறுதற்குரிய வாழ்க்கையாவது எல்லாரும் போல இல்லாமல் மற்றவர்கள் எடுக்கத் தயங்குகின்ற, அவர்கள் விரும்பாத, வேறு யாரும் செய்யாத, புதிய துணிவு மிக்க முயற்சிகளை மேற்கொண்டு வரலாற்றைப் புதுக்குவதன் மூலம் அமையும். இத்தகைய புகழ்மிக்க வாழ்க்கை வளமான வாழ்க்கையின் பயன்.

புகழ்மிக்க வாழ்க்கை வாழ்தல் வேண்டுமாயின் செய்யத்தகாதன அறிந்து விட்டொழித்தல் வேண்டும்; செய்யத்தக்கன அறிந்து செய்தல் வேண்டும். மானுடத்தின்